வளர்ப்பு மகளுக்கு திருமணம் – சகோதரிகள் சண்டை
திருநெல்வேலி: வளர்ப்பு மகளை திருமணம் செய்து வைப்பதில் அக்காள், தங்கை இடையே போட்டி ஏற்பட்டதையடுத்து நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலப்பாளையம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் முனியம்மாள். விதவையான இவர் பாளை அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றினார். இவருக்கு குழந்தைகள் இல்லாததால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அவருக்கு வீரலெட்சுமி என்று பெயரிட்டார். தனது கணவர் இறந்துவிட்டதால் மேலப்பாளையம் வசந்தாபுரத்தை சேர்ந்த தனது தங்கை மாரியம்மாள், அவரது கணவர் தங்கவேல் ஆகியோரை வீரலெட்சுமிக்கு வளர்ப்பு பெற்றோராக நியமித்து பள்ளியில் படிக்க வைத்தார். ஆனால் அதற்கான செலவுகள் அனைத்தையும் முனியம்மாள் ஏற்றுக் கொண்டார். வீரலெட்சுமி இரண்டு பேர் வீட்டிற்கும் சென்று வருவார். 10ம் வகுப்பு படித்து வந்த வீரலெட்சுமி மீது முனியம்மாளின் அண்ணன் மகன் கார்த்திகேயனுக்கு ஆசை ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார். ஆனால் வீரலெட்சுமிக்கு அவரை பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து முனியம்மாள் வீட்டிற்கு செல்வதை வீரலெட்சுமி நிறுத்தி விட்டார்.
தற்போது அவருக்கு 19 வயது ஆகிறது. எனவே திருமண ஏற்பாடுகளை செய்தனர். முனியம்மாள் தனது அண்ணன் மகன் கார்த்திகேயனுக்கே அவரை திருமணம் செய்து வைக்க விரும்பினார். ஆனால் மாரியம்மாளுக்கு அது பிடிக்கவில்லை.
இதனால் அக்காள்-தங்கை இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து முனியம்மாள் நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், வீரலெட்சுமியை தான் தத்தெடுத்து வளர்த்து படிக்க வைத்ததாகவும், எனவே தனக்குதான் அவர் சொந்தம் என்றும் கூறியுள்ளார். இதேபோல் மாரியம்மாளும் வீரலெட்சுமி தன்னுடைய மகள் என்று கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார்.
இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி சேஷசாயி வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.