ஆறுமுகன் தொண்டமான் யார் பக்கம் என்பதை தௌிவுபடுத்த வேண்டும்!!
ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடனா அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடான இருக்கின்றார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என, பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (02) தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியுடன் யார் வேண்டுமானாலும் தேநீர் அருந்தலாம் அதற்கு தடை இல்லை, தேநீர் அருந்துபவர்கள் சொல்வதெல்லாம் உண்மையாகாது எனவும் சம்பள பேச்சுவார்த்தை தொடர்பாக ஒரு சிலர் கூறுகின்ற கருத்துகளை பெருந்தோட்ட மக்கள் கணக்கெடுக்க வேணடிய தேவையில்லை, எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்பு பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இவர்களுக்கான சாதாரண சம்பளம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
தோட்ட கம்பனிகளுடன், எம்முடன் இணைந்து இருக்கும் தொழிற்சங்கங்களையும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும்.
மலையகத்தை பொருத்த வரையில் நுவரெலியாவை ஒரு உல்லாச மையமாக மாற்றுவதற்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்துவதற்கும், பண்ணை தொழிலாளர்களுக்கு புதிய தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இதேவேளை, 100 நாள் வேலைத் திட்டத்தினூடாக மலையக பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் எதிர்வரும் 10ம் திகதி மக்களிடம் கையளிக்கப்படும் என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் இதன்போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக மக்களுடைய வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்க தனித் தனியான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காரணமாக இருந்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க எங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டவாறு செயல்பட்டமை மலையக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
மலையக மக்களை பகடை காய்களாக பயன்படுத்திய அரசியல்வாதிகளுக்கு இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் நல்ல பாடத்தை புகட்டுவார்கள். எதிர்காலத்திலும் ஜக்கிய தேசிய கட்சி மலையக மக்களுடைய தேவைகளை அறிந்து செயல்படும்.
அத்தோடு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மலையக மக்கள் தங்களுடைய வாக்குகளை அளித்து மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெற செய்து இந்த நாட்டின் ஜனாதிபதியாக மாற்றினார்கள்.
அதேபோல் தான் இம்முறையும் நிச்சயமாக ஜக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற செய்வார்கள் என உறுதியாகிவிட்டது என்றார்.
Average Rating