ஒற்றையாட்சிக்குள் நியாயமான அதியுச்ச அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாது-புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்!!
ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய வகையிலான நியாயமான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாதென புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணி ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு எனவும் குறிப்பிட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டு பிரதான கட்சிகளும் ஒற்றையாட்சிக்குள் தீர்வென்றே குறிப்பிட்டு வருகின்றன. ஒற்றையாட்சிக்குள் 60 ஆண்டு காலமாக புரையோடிப்போயிருக்கும் இனப் பிரச்சினைக்கான தீர்வை எட்டமுடியாது என்பது வெளிப்படையானது.
அதேநேரம் ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுவதென்பதும் சாத்தியமற்ற விடயம். குறிப்பாக கடந்த காலங்களில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வடமாகாண சபைக்கு மறுக்கப்பட்ட நிலையில் ஏனைய அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத் தரப்பின் தலையீடுகள் அதிகமாகக் காணப்பட்டன.
அதேபோன்று ஒற்றையாட்சி முறைமையில் உள்ளுராட்சி நிர்வாக நடவடிக்கைகளை தலையீடுகள் இன்றி மேற்கொள்வதென்பதும் நடைமுறைச்சாத்தியமற்ற விடயமாகும். ஆகவே ஒற்றையாhட்சிக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் நியாயமான தீர்வு என்பது ஒருபோதும் கிடைக்க முடியாதவொன்று.
தந்தை செல்வநாயகம் இவ்விடயத்தை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இதன் காரணத்தினாலேயே அவர் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தார். அதனடிப்படையில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடகிழக்கில் சுய நிர்ணய அடிப்படையிலான சமஷ்டி முறைமையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வைக் கோரியிருக்கின்றது என்றார்.
Average Rating