படக்..படக்..படக்..! -பாவனாவின் மனசு!
பாவம்ணா.. என்கிற மாதிரிதான் இருக்கிறது பாவனாவின் தமிழ்பட வாழ்க்கை. திடீரென்று குளுக்கோஸ் ஏற்றியதுபோல் வருகிற ராமேஸ்வரம் ஸ்டில்கள், ‘பயப்படாதே’ என்று தெம்பை கொடுத்தாலும் படக் படக் என்று அடித்துக் கொள்கிறது பாவனாவின் மனசு. அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் மனசு வைத்தால் டாப்கியரை போட்டுவிடலாம் என்று கனவு காண்கிறார். இடையில் ஒரு படத்திற்கு சிலம்பரசன் அழைக்க, அந்த ஸ்பாட்டிலேயே சலாம் போட்டு ஒதுங்கிவிட்ட பாவனாவிற்கு, நான் கடவுள் ஜுரம் இன்னும் விட்டபாடில்லை. இடையில் தெலுங்கில் அழைத்தார்களாம். ஜுனியர் என்.டி.ஆரோடு ஜோடி சேர்கிற வாய்ப்பை வம்படியாக மறுத்தவர், பிடிவாதமாக கேட்ட ஒரு தெலுங்குபட தயாரிப்பாளருக்கு சம்மதம் சொல்லி, மேக்கப் பாக்சையும் பிரித்து விட்டார்! படத்தின் பெயர் ஒன்டரி. கோபிநாத் ஜோடி! பாவனாவின் ஸ்டில்கள் தெலுங்கு பத்திரிகைகளில் வர துவங்கியதும் நிறைய வாய்ப்புகள் கதவை தட்டுகிறதாம்.
தெரியாத மொழி. தெரியாத ஊர். கவனமாகதான் கையாள வேண்டியிருக்கிறது என்று கவலைப்படும் பாவனா, ராமேஸ்வரம் ஹிட்டானால், தமிழில் தொடர்வாராம். இல்லையென்றால்…? சரி என்று சொல்லாமலும், வேண்டாம் என்று மறுக்காமலும் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிற இரண்டு தெலுங்கு படங்களுக்கு சம்மதம் சொல்லிவிடுவாராம்.