ராஜஸ்தானில் காமெடி: கற்பழிப்பு குற்றவாளி ஆசாராம் பாபு பாடப் புத்தகத்தில் புனிதராக சித்தரிப்பு!!
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு. பலவித சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவரான இவர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்புக்கான பொது அறிவு பாடப் புத்தகமான புதிய வெளிச்சம் (நயா உஜாலா) என்ற நூலில் ஆன்மிகத்துக்காக உழைத்த புனிதர்களைப் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.
சுவாமி விவேகானந்தர், அன்னை தெரசா, கபீர்தாஸ், குரு நானக், மீராபாய், ஆதி சங்கராச்சாரியார் உள்ளிட்ட ஆன்மிக பெரியவர்களைப் பற்றிய வாழ்க்கை குறிப்பு படங்களுடன் வெளியாகியுள்ளது. இதில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபுவின் படமும் இடம்பெற்றுள்ளது.
இந்த புத்தகத்தை டெல்லியில் உள்ள குருகுல் பதிப்பகம் வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த குளறுபடி தொடர்பாக ஜோத்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, அந்த புத்தகம் அச்சிடப்பட்டபோது ஆசாராம் பாபு மீது எந்த வழக்கும் இல்லை என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து, அந்த புத்தகத்தை தடை செய்தும், அவற்றை மூன்றாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Average Rating