லசந்த கொலையாளி, பிரகீத் கடத்தல்காரர்கள் அரசாங்கத்தில் உள்ளனர்!!!
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுக்கவில்லை என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்தியது தவறான முடிவு என மஹிந்த ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வருத்தமில்லை என்றும் அதைத் தவிர தன் ஆட்சிகாலத்தில் தான் எடுத்த எந்த முடிவு குறித்தும் தனக்கு வருத்தமில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமது முன்னணிக்கு 117 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு தனக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே மூன்று சந்திப்புகள் இடம்பெற்றதை அவர் உறுதிப்படுத்தும் அதேவேளை, மூன்றாவது சந்திப்பு ரகசியமானது, அது குறித்த விவரங்களை வெளியிட முடியாது எனவும் தெரிவித்தார்.
நாட்டில் ஜனாதிபதியாக உள்ளவர் எவ்வளவு முறை வேண்டுமானாலும் மீண்டும் அப்பதவிக்கு மீண்டும் போட்டியிடலாம் எனக் கூறும் சர்ச்சைக்குரிய 18ஆவது சட்டத் திருத்தத்தை கொண்டு வந்ததையும் மஹிந்த நியாயப்படுத்தியுள்ளார்.
முதல் முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறும் குற்றச்சாட்டை மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில் சில ஊழல் பேர்வழிகளை தான் காப்பாற்றியுள்ளதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டதற்கும், பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனதற்கும் காரணமானவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் உள்ளார்கள் என தான் நம்புவதாக மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
Average Rating