போளூர் பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது!!
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு போளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 2,500–க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.
போளூர் வட்டார வளமையத்தில் ஆசிரியர் பயிற்றுனராக வேலை பார்ப்பவர் லட்சுமிநாராயணன். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
லட்சுமிநாராயணன், போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளின் கல்வித்தரத்தை ஆய்வு செய்வதற்காக வந்து செல்வார்.
அப்போது ஒவ்வொரு மாணவியிடமும் அவர் ஆபாசமாக பேசி வந்துள்ளார். மேலும் 8–ம் வகுப்பு மாணவிகளிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் நேற்று பள்ளி முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். அப்போது ஆசிரியர் பயிற்றுனரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சாலை மறியல் செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் கண்ணையன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்களிடத்திலும் ஆசிரியர் பயிற்றுனரை கைது செய்ய வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அவரை உடனடியாக கைது செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
பின்னர் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தசாமியிடம், துணை சூப்பிரண்டு கணேசன் விசாரித்தார். அப்போது ஆசிரியர் பயிற்றுனர் லட்சுமிநாராயணனை சஸ்பெண்டு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அவரை சஸ்பெண்டு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போளூர் ரெயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் பதுங்கியிருந்த சில்மிஷ ஆசிரியர் லட்சுமி நாராயணனை போலீசார் கைது செய்தனர்.
Average Rating