ஜார்க்கண்டில் சூனியம் வைத்ததாக கூறி ஒரே நாளில் 5 பெண்கள் படுகொலை: மகளிர் ஆணையம் கண்டனம்!!
மூடநம்பிக்கைக்கு பெயர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைப்பதாக சந்தேகித்து சாமியார்கள், குறிசொல்பவர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று இரவு தலைநகர் ராஞ்சி அருகில் இருக்கும் கான்ஜியா கிராமத்தை சேர்ந்த ஒரு கும்பல், கைத்தடி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இன்று காலை இதுபற்றிய தகவல் அறிந்து, அந்த கிராமத்துக்கு விரைந்துச் சென்ற போலீசார், பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த படுகொலைக்கு முதலமைச்சர் ரகுபர்தாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநில மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வலிமையான கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மகளிர் ஆணையத் தலைவி மாகுவா மஞ்சி குறிப்பிட்டுள்ளார்.
போதிய கல்வியறிவின்மை, நகரங்களுக்கான சாலை வசதி இல்லாமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் விழிப்புணர்வு இல்லாமை போன்ற சில காரணங்கள்தான மக்களின் மூடநம்பிக்கைக்கு காரணம் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கான மதிய உணவு சமைப்பதில் அதிக அக்கறை காட்டுவதை விடுத்து, நல்ல கல்வியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மகளிர் ஆணைய தலைவி வலியுறுத்தினார்.
கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2012 வரை சூனியம் வைப்பதாக சந்தேகித்து 2,097 பேர் இந்த மாநிலத்தில் இதுபோல் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating