ஹைதி தீவுக்கு அமைதியை நிலைநாட்ட சென்றபோது பெண்களை கற்பழித்த இலங்கை ராணுவத்தினர் மீது ஐ.நா. நடவடிக்கை: கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்
ஹைதி தீவுக்கு ஐ.நா. சார்பாக அனுப்பப்பட்ட அமைதிப்படையில் இடம்பெற்று இருந்த இலங்கை ராணுவத்தினர் சிலர், அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளை கற்பழித்தனர். இதையடுத்து அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு ஐ.நா. உத்தரவிட்டுள்ளது. அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள நாடான ஹைதி தீவில் உள்நாட்டு கலவரம் மற்றும் தீவிரவாதம் பெருகி உள்ளது. இதையடுத்து அங்கு அமைதியை நிலை நாட்டுவதற்காக ஐ.நா. சார்பாக அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு நாட்டு ராணுவத்தினரும் இடம் பெற்று இருந்த அந்த படையில் இலங்கையை சேர்ந்த 950 வீரர்களும் இருந்தனர். இந்த நிலையில் அமைதியை நிலைநாட்ட சென்ற இடத்தில் இலங்கை ராணுவத்தினர் தகாத காரியத்தில் ஈடுபட்டனர். ஹைதி தீவில் உள்ள ஏராளமான பெண்களை கற்பழித்து விட்டனர். சிறுமிகளை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. இது தொடர்பாக இலங்கை ராணுவத்தை சேர்ந்த 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து ஐ.நா. சார்பாக விரிவான விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு 108 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஐ.நா., முடிவு செய்தது. அதன்படி இலங்கை ராணுவத்தினர் இன்று கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்த தகவலை ஐ.நா., பெண் செய்தி தொடர்பாளர் மிச்சிலி மோண்டாஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “நடந்த சம்பவத்துக்காக ஐ.நா. மற்றும் இலங்கை அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஐ.நா. சபை செய்யும். ராணுவத்தினர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது இலங்கை அரசு முடிவு செய்யும்” என்றார்.
அதிகபட்ச தண்டனை
இதற்கிடையே குற்றச்சாட்டுக்கு உள்ளான 108 பேருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது குறித்து இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நனயகரா கூறுகையில், “ராணுவத்தினர் தவறு செய்து இருப்பது நிரூபிக்கப்பட்டால், இலங்கை அரசு சட்டம் மற்றும் ராணுவ சட்டத்தின் கீழ் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். இது உறுதி. இந்த சம்பவம் ஒரு கரும்புள்ளி ஆகும்” என்றார். எனினும், அதிகபட்ச தண்டனையா எத்தகைய தண்டனை வழங்கப்படும் என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.