ஆனந்த சரத் குமாரவிற்கு 7வது தடவையாகவும் பிணை வழங்க மறுப்பு!!
மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாண சபையின் தலைவர் ஆனந்த சரத் குமாரவிற்கு 7வது தடவையாகவும் பிணை வழங்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.
மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வறிய மக்களுக்கு கூரைத்தகடுகள் வழங்கும் போது 9 இலட்சம் ரூபா நதி மோசடி செய்ததாகக் கூறி கடந்த ஜூன் மாதம் 12ம் திகதி பொலிஸ் விஷேட நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் வடமத்திய மாகாண சபையின் தலைவர் ஆனந்த சரத் குமார கைதுசெய்யப்பட்டார்.
குறித்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது ஆனந்த சரத் குமார சார்பில் நீதிமன்றில் ஆஜராகி இருந்த சட்டத்தரணிகள் இன்று 07 வது தடவையாகவும் பிணை வழங்குமாறு நீதிமன்றைக் கேட்டிருந்தனர்.
எனினும் இந்தக் கோரிக்கையை நிராகரித்த அநுராதபுரம் நீதவான் சானக கலங்சூரிய, சந்தேகநபரான வடமத்திய மாகாண சபையின் தலைவர் ஆனந்த சரத் குமாரவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேகநபருக்கு பிணை வழங்குவது தொடர்பாக அன்றைய தினம் பரிசீலனை செய்து பார்ப்பதாக தெரிவித்த நீதிபதி, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கான அறிக்கைகளை சமர்பிக்குமாறு பொலிஸ் விஷேட நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு உத்தரவிட்டதாக எமது அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
Average Rating