5 இலங்கை மீனவர்களை விடுதலை செய்தது தமிழ்நாடு!!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.
இந்திய கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேரைக் கடலோர காவல்படையினர் கடந்த மாதம் கைது செய்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் இலங்கை சிறையில் இருந்த 40 தமிழக மீனவர்களை இலங்கை விடுதலைச் செய்தது.
இதைத் தொடர்ந்து, புழல் சிறையில் இருந்த இலங்கை மீனவர்களை 5 பேரையும் தமிழக அரசு விடுதலைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, 40 தமிழக மீனவர்கள், இன்று தமிழகம் திரும்புகின்றனர். அவர்களை வரவேற்க உறவினர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து, கடந்த ஜூன் மாதம் மீன்பிடிக்கச் சென்ற, 40 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் பிடித்து சிறையில் அடைத்தனர். அவர்களை விடுக்க வேண்டும் என, மீனவ அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம், நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 40 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள், இலங்கையில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களது படகுகள் மட்டும் விடுவிக்கப்படவில்லை.
இன்று மாலை, கடலோர காவல்படை உதவியுடன் அவர்கள் அனைவரும் தமிழகம் திரும்புகின்றனர். காரைக்கால் வரும், 40 பேரும் அங்கிருந்து நாகை மற்றும் ராமேஸ்வரம் செல்வார்கள். அவர்களின் படகுகளை மீட்கவும் முயற்சி நடைபெற்று வருவதாக தமிழக மீன்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating