மஹிந்தவின் தோல்வி நெற்றியில் எழுதப்பட்டுவிட்டது!!
ஜேவிபி ஐக்கிய தேசிய கட்சியின் வால் அல்ல என்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சியின் இதயமாக மாறி உள்ளதென்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று எதிர்காலத்திலும் எந்தவொரு கட்சிக்கும் வாலாக மாறப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று பத்தரமுல்லையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்க வேண்டும்.
ஆனால் இதுவரை மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்கள் மட்டுமே தமது சொத்து விபரங்களை வழங்கியுள்ளனர்.
பொதுமக்களுக்கு வேண்டுமானால் எமது சொத்து விபரங்களை பார்வையிட முடியும்.
ராஜபக்ஷ மற்றும் அவரது கூட்டாளிகள் தமது தோல்வியை உணர்ந்து பீதியடைந்துள்ளனர்.
இதனால் நாம் ஐக்கிய தேசிய கட்சியின் வால் போன்று செயற்படுகின்றதாக பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
மஹிந்தவின் தோல்வி நெற்றியில் எழுதப்பட்டுவிட்டது. அவருக்கு பிரதமராவதற்கு அதிகாரம் இல்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டாக பிளவுபட்டுள்ளது. அவர்களில் ஒரு தரப்பினர் மற்ற தரப்பினருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பகிரங்கமாகவே கூறுகின்றனர் என்றார்.
Average Rating