வீட்டுப்பணி, டிரைவர் வேலைக்கு சவுதி அரேபியாவில் புது நிபந்தனை
வீட்டுப்பணி மற்றும் டிரைவர் வேலைக்கு ஆள் அமர்த்திக்கொள்ள, சவுதி மக்களுக்கு புது நிபந்தனைகளை அந்த நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மக்கள், தங்கள் வீட்டில் பல்வேறு வேலைகளை செய்யவும், டிரைவர் வேலைக்கும் வெளிநாடுகளில் இருந்து ஆட்களை அழைத்துக்கொள்ள அனுமதி உள்ளது. அதற்காக, தனி விசா அளிக்கப்படுகிறது. சமீப காலமாக, இந்த பணிகளுக்காக, வருபவர்களை பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கும் பிரச்னை வெடித் துள்ளதால், சவுதி அரசு, இப்போது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. போதுமான வருமானம் இருந்தால் ஒழிய, பணியாட்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட மாட்டாது. சவுதியில் வசிப்போர், தங்கள் வீட்டில் வேலை செய்ய, ஒன்றுக்கு மேற்பட்ட பணியாட்கள், டிரைவர்களை நியமித்துக்கொள்ள இதுவரை எந்த நிபந்தனையும் இல்லை. ஆனால், இனி அப்படி செய்ய முடியாது. சொந்த வீடு வைத்திருப்போருக்கு, குறைந்த பட்சம், மாதம் 50 ஆயிரம் ரூபாய் வருமானம் இருந்தால் தான், ஒரு பணியாளர், ஒரு டிரைவரை அமர்த்திக்கொள்ள, வெளிநாடுகளில் இருந்து ஆட்களை அழைத்துக் கொள்ள முடியும். அதுபோல, இரண்டாவது பணியாளர், இரண்டாவது டிரைவர் தேவை என்றால், அதற்கு இரண்டாவது மனைவி இருக்க வேண்டும். இப்படி நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் தான், பணியாட்களை இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அழைத்துக்கொள்ள விசா தரப்படும். அதிகபட்சம், நான்கு பணியாள், டிரைவர் அமர்த்திக்கொள்ள சவுதியில் வசிப் போருக்கு விசா தரப்படும். அதற்கு, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் முதல், இரண்டு லட்சம் வரை, மாத வருமானம் இருக்க வேண்டும்.