முருகன், சாந்தன், நளினி விடுதலை வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!!
முருகன், சாந்தன் உட்பட ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதத்தை ஒருவாரத்தில் தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் கடந்த ஆண்டு பெப்ரவரி 18-ம் தேதி தமிழக அரசு விடுதலை செய்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பாக நடந்து வந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஸ், ஏ.பி.சாப்ரே, யு.யு.லலித் ஆகிய 5 பேர் கொண்ட அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதிட்டார்.
அவர், ‘மத்திய அரசின் அதிகாரத்தில் மாநில அரசு தலையிட அனுமதிக்க கூடாது. வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தண்டனை குறைப்புக்கு குடியரசுத் தலைவர், மாநில ஆளுநருக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
சிறையில் 23 ஆண்டுகள் இருந்ததால், விடுதலை செய்யலாம் என்பது சரியல்ல. ஒரு வழக்கின் குற்றத்தன்மையைப் பொறுத்தே தண்டனை வழங்கப்படுகிறது’ என்று வாதிட்டார்.
இதைக்கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
வழக்கில் தொடர்புடைய அனைவரும் தங்கள் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டனர்.
Average Rating