ஜார்க்கண்டில் சூனியம் வைத்து சிறுவனைக் கொன்றதாக கூறி 2 பேர் அடித்துக் கொலை!!
ஜார்க்கண்ட் மாநிலம் லோகர்டகா மாவட்டத்தில் சூனியம் வைத்ததாகக் கூறி 2 பேரை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஞ்சியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கய்ரோ காவல் சரகத்திற்குட்பட்ட ஹிது கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 8 வயது சிறுவன் ஒருவன் திடீரென இறந்துவிட்டான். இவனது சாவுக்கு, அப்பகுதியில் மாந்திரீக வேலைகள் செய்து வரும் மன்னா பகத் (40) மற்றும் புத்ராம் ஓரான்(45) ஆகியோரின் சூனிய வேட்டைதான் காரணம் என பொதுமக்கள் கருதினர்.
இதையடுத்து, சிறுவனின் சடலத்தை பொது இடத்தில் கிடத்தி, மந்திரவாதிகள் இருவரையும் அங்கு அழைத்து வந்து சிறுவனை உயிர்ப்பித்து கொடுக்கும்படி கூறியுள்ளனர். அவர்கள் திருதிருவென விழிக்கவே, அவர்கள் மீது மேலும் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். அவர்கள் இருவரும் வெளியில் தப்பி ஓடிவிடாதபடி பொதுமக்கள் சுற்றி நின்றுகொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை கலைத்தனர். ஆனால், போலீசார் மீதும் கற்களை வீசி பொதுமக்கள் தாக்கினர். இதில் 2 போலீஸ்காரர்களுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக பொதுமக்களை விரட்டியடித்த போலீசார், தாக்கப்பட்ட மந்திரவாதிகள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர்கள் இறந்துவிட்டனர்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் சிலரைத் தேடி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதுபோன்று 8 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating