செங்குன்றத்தில் 3-வது திருமணம் செய்ய முயன்ற ஓட்டல் ஊழியர் கைது!!
சென்னை கிழக்கு தாம்பரம் கணபதிபுரத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (27). இவர் கடந்த 2 வருடத்திற்கு முன்பு வேலைக்காக ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டைக்கு சென்றார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த முனி எந்திரா (18) என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் முனி எந்திராவின் நகையை எல்லாம் விற்றுவிட்டு அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்னைக்கு தப்பி ஓடி வந்தார்.
பின்னர் சோழவரத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நாகேந்திரன் வேலை பார்த்து வந்தார். தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி சோழவரத்தை சேர்ந்த சந்தியா (19) என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் 2–வது திருமணம் செய்தார். நாகேந்திரனும், சந்தியாவும் செங்குன்றம் திருவள்ளுர் தெருவில் குடியிருந்து வந்தனர்.
இந்த நிலையில் நாகேந்திரன் வேலூரில் உள்ள திருமண புரோக்கரிடம் 3–வது ஒரு பெண்ணை திருமணம் செய்வது குறித்து போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த சந்தியா அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சந்தியா செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்குப்பதிவு செய்து நாகேந்திரனிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் நாகேந்திரன் 2 திருமணம் செய்ததையும், 3–வது திருமணம் செய்ய முயற்சி செய்ததை ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து போலீசார் நாகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Average Rating