சித்தூர் அருகே டிராக்டர் டேங்கருக்குள் மறைத்து ரூ.10 லட்சம் செம்மரம் கடத்தல்: 2 பேர் கைது!!
சித்தூரில் இருந்து பலமநேருக்கு வாகனத்தில் செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக, பலமநேர் போலீசாருக்கு தகவல்கள் வந்தன. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேந்தர்ரெட்டி தலைமையில் போலீசார் பலமநேர்–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பலமநேர் அருகே சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு தண்ணீர் டிராக்டர் டேங்கரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அந்த டிராக்டர் டேங்கர் நிற்காமல் வேகமாக சென்றது. உடனே போலீசார் ஒரு ஜீப்பில் விரட்டிச்சென்றனர். சிறிது தூரம் சென்று சாலையின் குறுக்கே ஜீப்பை நிறுத்தி டிராக்டர் டேங்கரை மடக்கினர். அந்த நேரத்தில் டிராக்டர் டேங்கரில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். டிராக்டர் டேங்கரில் சோதனை செய்தபோது, அதில் 12 செம்மர கட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
அந்த செம்மர கட்டைகள் சித்தூரில் இருந்து பலமநேருக்கு கடத்தி வரப்பட்டதாக டிரைவர் கூறினார். இதையடுத்து, பங்காருபாளையம் கோவர்தன் நகரை சேர்ந்த டிராக்டர் டேங்கர் டிரைவர் சேகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் டேங்கருடன், செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
அவர்கள் மீது பலமநேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்கள் கடத்தப்படுவதாக திருப்பதி சிறப்பு காவல் படை போலீசாருக்கு தகவல்கள் வந்தன. சிறப்பு காவல் படை போலீசார் சேஷாசலம் வனப்பகுதியில் சாணிசாயி, பாலப்பள்ளி, தேவதாரு, சுசிலேரு, கோடூரு ஆகிய பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தேவதாரு சோதனைச்சாவடி வழியாக வந்த கும்பலை, போலீசார் சுற்றி வளைத்தனர். அதில் 20 பேர் தப்பி ஓடிவிட்டனர். 2 பேர் பிடிபட்டனர். பிடிபட்ட 2 பேரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், செம்மர கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து, 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 17 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. * * * வேலூர்–5
Average Rating