சீனாவில் சாலை விபத்துகளில் இந்த ஆண்டு 40,000 பேர் பலி!
இந்த ஆண்டின் கடந்த 6 மாதங்களில் சீனாவில் நடந்த சாலை விபத்துகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் இதனால் அரசுக்கு சுமார் ரூ. 400 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான கடந்த 6 மாதங்களில் சீனாவில் கிட்டத்தட்ட 2 லட்சம் வாகன விபத்துகள் நடந்துள்ளன. இதில் 41 ஆயிரத்து 933 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இத்தகவலை சீன சாலைப்போக்குவரத்து நிர்வாகத்துறையின் துணை இயக்குநர் வாங் ஜின்பியாவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மிக வேகம், அதிக சுமை, விரைவு சாலைகளில் விதிமுறைகளைகளுக்கு புறம்பான பயணம் போன்றவையே விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்றும் இந்த காரணங்களால் மட்டுமே இந்த ஆண்டு 12 ஆயிரத்து 790 பேர் பலியானதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு விபத்துகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகம் என்றும் பொருளாதார இழப்பு 24.7 சதவீதம் கூடுதல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.