மனித உரிமை கமிஷனில் நடிகை ரோஜா புகார்: போலீசார் அராஜகமாக நடப்பதாக குற்றச்சாட்டு!!
ஆந்திர மாநிலம் நகரி நகர சபை தலைவி சாந்திகுமார். கடந்த மாதம் நகரசபை ஊழியர் ஒருவரை சாந்திகுமாரின் மகன் சுரேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சுரேசை நகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்–இன்ஸ்பெக்டர் பிரசாத் ஆகியோர் கைது செய்தனர். இந்த நிலையில் சாந்தி குமாரின் கணவரும், நகரி முன்னாள் நகரசபை தலைவருமான கே.ஜே.குமாரை 2 நாட்களுக்கு முன்பு நகரி போலீஸ் இன்ஸ்பெக்டரும், சப்–இன்ஸ்பெக்டரும் வீட்டில் இருந்து இழுத்து சென்று கைது செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட மோதலில் நகரசபை தலைவி சாந்திகுமாரின் ஜாக்கெட் கிழிந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியும், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள் மீது நடிகை ரோஜா, நகர சபை தலைவி சாந்திகுமார் ஆகியோர் மனித உரிமை கமிஷனில் புகார் செய்துள்ளனர்.
பின்னர் நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியை கைப்பற்றினார். ஆனால் நகரி சட்டசபை தொகுதி மற்றும் நகரி நகராட்சியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
இதை சந்திரபாபு நாயுடுவால் தாங்க முடியவில்லை. நகரியில் எங்கள் கட்சியை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார். எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது.
முன்னாள் நகரசபை தலைவர் கே.ஜே.குமார் அராஜகமாக கைது செய்யப்பட்டதை கண்டித்து நகரியில் இன்று தர்ணா போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம். ஆனால் போராட்டத்துக்கு அனுமதி தரவில்லை. நகரியில் இன்று 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating