இப்படியும் சில ஜென்மங்கள்: கட்டிய மனைவியையே சாமியாருக்கு காணிக்கையாக்க துடித்த புதுமாப்பிள்ளை!!
கடவுளின் மீதுள்ள நம்பிக்கையால் தன்னைத்தானே வதைத்துக் கொள்பவர்கள் மூட நம்பிக்கையாளர்கள் என பகுத்தறிவாளர்கள் கூறிவரும் நிலையில், கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் சாமியாருக்கு, கட்டிய மனைவியையே காணிக்கையாக்க துடித்த ஜென்மத்தை என்னவென்று அழைப்பது?
ஒடிசா மாநிலத்தின் கேந்த்ரபுரா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு புகார் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“கடந்த ஜனவரி மாதம் எனக்கு திருமணம் நடந்தது. திருமணமான நான்காம் நாள் சாரதி பாபா என்ற சாமியாரிடம் ஆசி பெறுவதற்காக எனது கணவர் என்னைக் கூட்டிச் சென்றார். ஆசிரமத்திற்குச் சென்றதும், அந்த சாமியார் எனக்கு புதுப்புடவையும், வளையலும் கொடுத்தார். இதை கண்டு பரவசப்பட்டுப்போன எனது கணவர், என்னை சிறிதுநேரம் அங்கேயே இருக்கும்படி கூறிவிட்டு, வெளியே சென்று விட்டார். புதிய இடம் என்பதால் எனக்கு மிகவும் பயமாகவும், பதற்றமாகவும் இருந்தது.
அந்த ஆசிரமத்தில் உள்ள உதவியாளர்கள் என்னை ஒரு குறிப்பிட்ட அறைக்குள் சென்று சாமியாரிடம் ஆசி வாங்கிக் கொள்ளுமாறு கூறினர். அவர்களின் நோக்கத்தையும், எனது கணவரின் மோசமான எண்ணத்தையும் புரிந்துகொண்ட நான் அந்த இடத்திலிருந்து தப்பியோடி வந்துவிட்டேன்.” என்று அந்த புகாரில் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பித்து வெளியே ஓடிவந்த அந்தப் பெண்ணிடம், அவரது கணவர் மீண்டும் உள்ளே போகுமாறு கூற, தன் விதியை நொந்துகொண்ட அந்தப் பெண் வேறு வழியின்றி தனியாகவே வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்தபோது அவர் கொடுத்த புகாரை எந்த காவல் நிலையமும் ஏற்றுக் கொள்ளவில்லை. சுயம்பு சாமியாராக தன்னை அழைத்துக் கொள்ளும் சாரதி பாபா, தற்போது ஒரு பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட அந்தப் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சாமியாரோடு இணங்கிப் போக மறுத்ததால் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தனது கணவர் தன்னை இம்சைப்படுத்தி வருவதாகவும், கீழ்த்தரமான அவரது புத்திக்கு அவரது பெற்றோரும் துணையாக இருந்து வருவதாகவும் அந்தப் புகாரில் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating