சகல தீர்மானங்களும் நாடு, மக்களின் வெற்றியை நோக்காகக் கொண்டிருக்க வேண்டும்!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒரு விசேட சந்திப்பில் கலந்துகொண்டனர்.
புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
தற்போது நாட்டின் தேவைகளை அறிந்து நாட்டுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் செய்ய முடியுமான பொறுப்புக்கள் குறித்து இங்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்து எடுக்கப்படும் சகல தீர்மானங்களும் நாட்டினதும் மக்களினதும் வெற்றியை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களிலும், நாட்டுக்கு ஏற்பட முடியுமான ஏனைய சவால்களின்போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சரியான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, உடன்பாட்டுடன் செயற்படுவதனால் மட்டுமே நாட்டு மக்களை வெற்றிப் பாதைக்கு கொண்டு வரமுடியும் எனவும் குறிப்பிட்டார்.
ஒன்றுபட்டு ஒரு அரசாங்கம் என்ற வகையில் செயற்படுவதே அதற்கு பொருத்தமான வழிமுறையாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஒரு திறந்த கலந்துரையாடலாக நடைபெற்ற இச்சந்திப்பில் ஒரு தேசிய அரசாங்கமாக எதிர்காலத்தில் செயற்படுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் விரிவாகக் கலந்துரையாடி தமக்கு ஒரு அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இதற்காக ஜோன் செனவிரத்ன அவர்களின் தலைமையில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்களை செயலாளராகக் கொண்டு ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் புதிதாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Average Rating