கல்முனையில் நான்கு இந்தியர்கள் கைது!!
சுற்றுலா விசாவில் வந்து சட்ட விரோதமாகத் தங்கியிருந்து விற்பனையிலும் மாந்திரீக வேலைகளிலும் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை இரவு கல்முனையிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தங்கியிருந்த போது, சந்தேகநபர்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்தியாவின் பெங்கழூரைச் சேர்ந்த 30, 31, 33 மற்றும் 22 வயதையுடைய நால்வரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
இவர்களிடமிருந்து இலங்கையில் விற்பனைக்கு அனுமதி பெறப்படாத ஒரு தொகை சட்டவிரோத விற்பனைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிகை அலங்கார எண்ணெய் வகைகள், ஷம்பூக்கள், திராவகங்கள், உருத்திராட்ச வசிய மாந்திரீக அணிகலன்கள் என்று அவர்கள் கூறும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இந்தியர்கள் இரகசியமான முறையில் வீடுவீடாகச் சென்று பொருட்களை விற்பதிலும், வசிய மாந்திரீக வைத்திய முறைகளிலும் ஈடுபடுவதாக பொது மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.
மேலும் சந்தேகநபர்களை நீதிமன்றில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
Average Rating