இலங்கை தேர்தலில் தமிழர்கள் அளித்த தீர்ப்பு மகத்தானது!
இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழர்கள் அளித்திருக்கிற தீர்ப்பு மிகவும் மகத்தானது என, பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொள்வதற்காக உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் வந்திருந்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அப்போது அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:–
தமிழர் பகுதியில் சிங்கள கட்சிகளும் போட்டியிட்டனர். ஆனால், தமிழக மக்கள் ஒன்றுபட்டு நின்று, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்து இருக்கிறார்கள். இந்த வெற்றியை, ஐ.நா.பேரவை, இலங்கை தமிழர்கள் அளித்த பொது வாக்கெடுப்பு தீர்ப்பாக கருத வேண்டும்.
எனவே, அங்குள்ள தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என ஐ.நா. பேரவையை நான் கேட்டுக் கொள்கிறேன். ரனில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் ஓர் உடன்படிக்கை செய்தார். அதில், தமிழர் பகுதியில் இருந்து இராணுவத்தை திரும்ப பெறுதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், சிங்கள குடியேற்றத்தை நிறுத்துதல் ஆகிய அனைத்தையும் ஏற்று கொண்டு, உடன்பாடு செய்யப்பட்டது.
ஆனால், இலங்கை பாராளுமன்றத்தில் இந்த உடன்பாட்டை ரணில் விக்ரமசிங்க கொண்டு வந்தபோது, அவரது கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், அந்த உடன்படிக்கையை கிழித்து எறிந்தனர். அந்த உடன்படிக்கையை ரணில் விக்ரமசிங்க அமல்படுத்தவில்லை.
இலங்கையில் அமையும் புதிய அரசால் தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்காது.
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு செயல்பட்டதை போல் தான் பாரதீய ஜனதா அரசும் செயல்படுகிறது. மோடி பிரதமராகி ஒரு வருடம் முடிந்து விட்டது. இருந்தாலும் ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இவ்வாறு பழ.நெடுமாறன் கூறினார்.
Average Rating