எக்னலிகொட வழக்கில் ஏழ்வர் கைதுசெய்யப்பட்டமைக்கு வரவேற்பு!!
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணமற்போன சம்பவம் தொடர்பாக ஐந்து இராணுவத்தினர் உள்ளிட்ட எழுவர் கைதுசெய்யப்பட்டமையை வரவேற்பதாக, நியுயோர்க்கை மையமாக கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
எக்னலிகொடவிற்கு என்ன நடந்தது என்பது குறித்த மர்மத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தினால் தீர்வை காண முடியுமானால், பிரகீத்தின் குடும்பத்தவர்களின் நீதிக்கான நீண்ட முயற்சிக்கு சிறு ஆறுதலாவது கிடைக்கும் என அந்தக் குழுவின் ஆசியாவுக்கான ஓருங்கிணைப்பாளர் பொப் டயட்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எக்னலிகொட விவகாரம் ஒரு சம்பவம் மாத்திரமே எனவும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் பதவி வகித்த காலப் பகுதியில் குறைந்தது ஓன்பது ஊடகவியலாளர்களாவது படுகொலை செய்யப்பட்டனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்துவதும், இலங்கையில் காணப்படும் தண்டனையிலிருந்து விலக்களித்தல் கலாச்சாரத்திற்கு முடிவை காண்பதும் அவசியமானது என பொப் டயட்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவிருந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating