தேசிய அரசாங்கம் குறித்து இறுதி இணக்கப்பாடு!!
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இறுதி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (தேசியப் பட்டியல்) மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
மலிக் சமரவிக்ரமவின் கையெழுத்திடப்பட்ட ஊடக அறிக்கை ஒன்று இன்று வௌியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, இந்த நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்து முகமாக முழுப் பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றியமைப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது.
அதற்காக குறைந்தது இரண்டு வருடங்களாவது தேசிய அரசாங்கமொன்றைத் தோற்றுவிப்பதாகவும் நாம் கூறினோம்.
அதற்கமைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒப்பந்தமொன்றிலும் சில தினங்களுக்கு முன் கைச்சாத்திட்டோம்.
தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் சுமுகமான மற்றும் ஆழமான வகையில் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம்.
இங்கு, எம் இரு தரப்பினரதும் அடிப்படை நோக்கம் மக்களுக்கு சேவையாற்றுவதாகும். சம்பிரதாய பூர்வமான அரசியல் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு தேசத்தின் எதிர்காலத்தை வளம் மிக்கதாக மாற்றியமைக்கும் செயற்பாட்டிற்காக நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
அமைச்சுப் பதவிகள் மற்றும் சலுகைகளுக்காக அன்றி தாய் நாட்டை மீண்டும் உயர்ந்ததொரு ஸ்தானத்திற்கு கொண்டுவரும் முயற்சிக்கு முன்னுரிமையளித்துள்ளோம்.
இங்கு எம் இரு தரப்பினருக்கும் அர்ப்பணிப்புக்களை செய்ய வேண்டியேற்பட்டது. ஆனாலும், அந்த சகல அர்ப்பணிப்புக்களையும் தேசத்தின் நன்மைக்காகவே நாம் மேற்கொண்டோம்.
புதிய அமைச்சரவை, புதிய பாராளுமன்றத்துடன் நாம் 60 மாதங்களில் புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்பும் சவால் மிக்க பயணத்தை வெற்றிகொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம், என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating