ஆப்கானில் குண்டுவெடிப்பு; 5 எம்.பி.க்கள் உள்பட 90 பேர் பலி
ஆப்கானிஸ்தானிலுள்ள வடக்குப் பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் உள்பட 90 பேர் பலியாயினதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பாக்லன் பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் எதிர்கட்சியின் செய்தித்தொடர்பாளர் உள்பட 5 பாராளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களில் 85 பேரும் உயிரிழந்ததாக அப்பகுதி கவர்னர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்த 90 பேருடைய உடல்களும் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், காயமடைந்த 50 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பாக்லன் மருத்துவமனை இயக்குனர் டாக்டர்.கலீலுல்லா தெரிவித்தார். அதேநேரத்தில், இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுவதாக பாக்லன் உளவுத்துறை தலைவர் அப்துர் ரஹ்மான் சயேந்த்காய் கூறியுள்ளார்.இந்தத் தாக்குதலை, தாலிபான்களே நடத்தியிருக்கக் கூடும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.