திருவாரூர் அருகே 51 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத அபூர்வ கிராமங்கள்
திருவாரூர் அருகே நீடாமங்கலத்தில் உள்ள ரிஷியூர் உள்ளிட்ட 6 கிராமங்களில் 51 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடுவது இல்லை. புதுமண தம்பதிகளுக்கு கூட இங்கு தலை தீபாவளி இல்லை. நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புத்தாடை எடுத்து, பலகாரங்கள் செய்து வருகின்றனர். ஊழியர்களுக்கு அரசு போனஸ் வழங்கியுள்ளது. ஜவுளி கடை, வெடிக்கடை, ஸ்வீட் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தீபாவளியை கொண்டாட வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்கள் தங்களது ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் 51 ஆண்டுகளாக தீபாவளியே கொண்டாடாமல் திருவாரூர் அருகே அபூர்வ கிராமங்கள் உள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா ரிஷியூர், நன்மங்கலம், பண்டாரஓடை, பச்சக்குளம், வரதராஜபெருமாள் கட்டளை, பனங்களத்தூர் ஆகிய கிராமங்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதே கிடையாது. தீபாவளி அன்று பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை புத்தாடை அணிவது கிடையாது. பலகாரம் செய்வது கிடையாது. வெடி வெடிப்பது இல்லை.
இதுகுறித்து ரிஷியூர் கிராம தலைவர் மருதமுத்து சோனாடு கொண்டார் (73) கூறியதாவது:
இந்த கிராமத்தில் 1955ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது கிடையாது. இது ஊர் கட்டுப்பாடு. இதற்கு காரணம், 1955ம் ஆண்டுக்கு முன் தற்போது உள்ளதுபோல் குறுவை சாகுபடி கிடையாது.
ஒருபோக சாகுபடி மட்டுமே செய்து வந்த விவசாயிகள் வருமானமின்றி சிரமப்பட்டு வந்தனர். அப்போது தீபாவளி பண்டிகை நெருங்கியது.
இதற்கு துணி, பலகாரம் வாங்க பணமின்றி விவசாயிகள் கடன் வாங்கி தீபாவளி கொண்டாடினர். பின்னர் கடனை அடைக்க முடியாமல் திணறினர். அன்றிலிருந்து தீபாவளி கொண்டாடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், தீபாவளி தமிழர் திருநாள் இல்லை.
தீபாவளி அன்று ஊர்க்கட்டுப்பாட்டை மீறுவோருக்கு அபராதம், தண்டனை விதிக்கப்பட்டது. புதுமண தம்பதியரும் கூட தலை தீபாவளி கொண்டாடக் கூடாது. இங்கு பெண் கொடுத்தவர்களிடமிருந்து தீபாவளி சீரும் வாங்குவது கிடையாது.
இவ்வாறு கிராம தலைவர் கூறினார்.