கண்டனங்களை விட அனுதாபங்களை மட்டுமே தந்த தமிழ்ச்செல்வன் படுகொலை!!

Read Time:28 Minute, 1 Second

lttespt3.jpgநீ எனது இருதைய மையப்பகுதியில் கைவைத்தால், நானும் வைப்பேன். அனுராதபுரத்திரத்திற்கு பதில் புலிகளின அரசியல் துறையைப் பலியெடுத்து அரசு தரப்பு தமிழ் ஈழ விடுதலை புலிகளின் முன்னாள் யாழ் மாவட்ட பிஸ்ரல் குழு தலைவரும்(தினேஷ்) தற்போதைய அரசியல் துறைப் பொறுப்பாளருமான சுப்பையா பரமு தமிழ் செல்வன் அவர்கள் சிறிலங்கா ஆகாய விமானங்கள் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (2007-11-02) காலை 6 மணிக்கு நடத்தப்பட இந்த தாக்குதலில் புலிகளின் லெப்ரினன் கேணல் தர முக்கிய தளபதிகளில் ஒருவரான அலெக்ஸ், மற்றும் பிரதான பொறுப்புகளில் இருந்தாக கூறப்படும் மிகுதன், கலையரசன், ஆட்சிவேல், மாவைக்குரன் ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளார்கள். புலிகளும் அரச படைகளும் தமது மக்களுக்காக போராடுகின்றோம் என கூறிக்கொண்டாலும் எப்போது தம்மை பாதுகாக்கும் வகையில் திரை மறைவில் பேரங்களை பேசி கொள்வது வழக்கம். நீங்கள் எங்கள் பிரதான நிலைகளை தாக்கினால் நாங்களும் தாக்குவோம் என புலிகள் அரச படைகளுக்கு அவ்வப்போது எச்சரித்து வருவார்கள். அதே போன்று அரசும் அவ்வப்போது அவர்களுடன் பேரங்களை பேசி கொண்டு கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும். .பொட்டம்மானுக்கு அடுத்த படியாக புலனாய்வு துறையில் பிரதான பதவி வகித்த நியூற்றன் என்பவர் அரசாங்க உத்தியோகஸ்தர் (கல்வி அதிகாரி) ஒருவருடன் கொழும்பில் இருந்த் கண்டிக்கு செல்லும் வேளை அரச புலனாய்வு துறையினரிடம் அகப்பட்டு கொண்டார். இவர் தன்னை ஒரு செல்வந்தராக காண்டிக்கொண்டு பென்ஸ் (Benz) வாகனத்தில் உலாவி வந்தவர். இவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு புலிகள் திரைமறவில் அரச படைகளுடன் பேரம் பேசியிருந்தார்கள்.அரச முக்கியஸ்தர்களும்,பிரதான படை அதிகாரிகளும் தமது இலக்கில் இருக்கின்றார்கள் எனவும் அவர்களை தாம் இன்னமும் கொல்லவில்லை என்றும், நீங்கள் நியூற்றனை விடுதலை செய்யாது விட்டால் அவர்களை நாம் இலக்கு வைப்போம் என எச்சரித்து இருந்தார்கள். ஆனால் அரச படைகளும், புலனாய்வு துறையும் தாம் நீயூற்றனை கைது செய்யவே இல்லை என மறுத்து விட்டனர். இதன் பின்னர் புலிகள் பட்டப்பகலில் கொழும்பில் இருந்த அரச புலனாய்வு துறை அதிகாரியான ஜெயரட்ணத்தினை கடத்திக்கொண்டு வன்னி சென்று இருந்தார்கள், இதன் பின்னரும் அரச படைகள் மசியவில்லையாதலினால் இலக்கு வைத்து நீண்ட நாட்களாக பிற்போடப்பட்டு வந்த முக்கிய அரச புள்ளிக்கு புலிகள் பொட்டு வைத்தார்கள். அது வெறு யாரும் அல்ல முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரேயாவார்.
இதனை முழுமையாக கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்துள்ளோம்.

தற்பொழுது புலிகள் அரச கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மையப்பகுதியான அனுராதபுரத்திற்குள் சென்று 9 இற்கு மேற்பட்ட பாவனையில் இருந்த விமானங்களை தாக்கியழித்திருந்தார்கள். அதற்கு பதிலடியாக அரச படையினர் குறி வைத்து விட்டு காத்திருந்த புலிகளின் பிரதான இலக்குகளில் ஒன்றில் மேல் பதிலடி கொடுதுள்ளார்கள் . புலிகள் எப்படி அரசின் பல நிலைகளை இலக்கு வைத்துள்ளார்களோ அதே போன்று வன்னிக்குள் இருக்கும் புலிகளின் மறைவிடங்கள் பல அரச புலனாய்வு துறையினரால் சேககரிக்கப்பட்டு விமானப்படையினரிடம் கையளிக்கப் பட்டுள்ளது. புலிகள் தெற்கில் தாக்குதலை தீவிரப்படுத்தினால் படையினரின் விமானங்கள் வன்னிக்குள் தினம் வலம் வரும் என்கின்ற எச்சரிக்கையினை அரசு தற்பொழுது விடுத்திருக்கின்றது.

கிழக்கின் வெற்றியை கொண்டாடிய அரச தரப்பிற்கு அனுராதபுர சம்பவம் மிகவும் அதிர்ச்சியை கொடுத்ததுடன்,எதிர்கட்சியினர் எள்ளி நகையாடும் நிலை ஏற்பட்டது. ஆகவே நீ எனது இருதய பகுதியை தாக்கி விட்டாய் நானும் தாக்குகிறேன் பார் என மகிந்த சகோதரர்கள் புலிகளுக்கு சவால் விடுப்படியாக தமிழ்செல்வனை இலக்கு வைத்துள்ளார்கள்.

புலிகள் பல நூறு கோடி ரூபாக்களை பெற்றுக் கொண்டு வட கிழக்கு மாகாண மக்களை வாக்களிக்க விடாது ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வருவதினை நிறுத்தி மகிந்த ஆட்சிக்கு வருவதற்கு உதவி செய்திருந்திருந்தார்கள் .அந்த உதவிக்கு நன்றியாக மகிந்த தமிழ்செல்வனை இல்லாது செய்திருக்கின்றார். கடந்த காலங்களில் புலிகளின் உயர் மட்ட தளபதிகளை (மாத்தையா,கிட்டு,விக்ரர்,பதுமன் ?) புலிகளின் தலைவரே கொலை செய்வார். முதல் தடவையாவாக இம்முறை அரசு செய்திருக்கின்றது

வன்னிக்குள் இருந்து வெளியே வரும் தகவல்கள்

வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தமிழ்செல்வன் எங்குள்ளார் என்பது எப்படி அரச படைகளுக்கு தெரிந்தது என்பது இன்னமும் புதிராக இருகின்றது. இதனையே பி.பி.சி செய்தி நிறுவனத்தின் இலங்கை தொடர்பாளார் ரொலன் பேர்க் (Roland Buerk) கொழும்பில் இருந்து தெரிவித்திருக்கின்றார் (It remains unclear how the milirary knew of Mr Thamilselval’s whereabouts.). புலிகள் எவ்வாறு பெருந்தொகையான பணத்தினை படை உயர் அதிகாரிகளில் இருந்து இராணுவ வீரர் வரை கொடுத்து தகவல்களையும் உதவிகளையும் பெற்றுக் கொள்ளுகின்றார்களோ அவ்வாறு தற்போதைய அரசும் வன்னிக்குள் இருக்கும் மக்களுக்கு பெருந்தொகையான பணங்களை வீசி தகவல்களை பெற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.

இதற்கு பணம் மட்டும் காரணம் அல்லாது வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுயில் வாழும் மக்களுக்கு புலிகளின் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பும் ஒரு காரணமாகும். அனுராதபுர விமான தளம் மீதான தாக்குதல் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் மட்டுமே கவர்ச்சிகரமாக இருந்தது. பிள்ளைகளை பறிகொடுத்த வாறு இருக்கும் வன்னி மக்களுக்கு இவைகள் சாதனைகளாக தெரியவில்லை.

தமிழ்மக்கள் இறந்தாலும் ,அல்லது சிங்கள மக்கள் இறந்தாலும் அதை ரசிக்கும் தன்மையானது புலம் பெயர்ந்து வாழும் மக்களின் ஒரு பகுதியினரிடம் பற்றிக்கொண்டுள்ளது.கரும் புலி பலியானாலும்,பேரூந்துகளில் குண்டு வைக்கும் போது சிங்கள பொதுமக்கள் பலியானாலும் இவர்கள் அதனை ரசிக்கின்றார்கள். வன்னியில் இருந்து புலிகள் அரச கட்டுப்பாட்டு பகுதியினை நோக்கி 10 ஏறிகணைகளை வீசினால், தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் அது 30 ஆக விழுகின்றது. கரும்புலிகள் 6 மணித்தியாலங்ளில் 9 விமானக்களை தாக்கியழித்து விடுகின்றார்கள், ஆனால் புலிகளின் ஊடகங்களின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்னம் உள்ளன.

தமிழ் செல்வன் கொல்லப்பட்டிருக்காவிடில் மாவீரர் உரை வரும் போது கரும்புலிகள் தாக்கிய விமானங்களின் எண்ணிக்கை ஐம்பதை தாண்டியிருக்கும். புலம் பெயர்ந்து வாழும் மக்களினால் மட்டுமே இதனை ரசிக்க முடிகின்றது. வன்னியில் இருக்கும் மக்கள் தமது பிள்ளைகளை புலிகளுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், நேரடியாக யுத்த பாதிப்புக்களுக்கு உள்ளாவதாலும் அவர்களினால் இதனை ரசிக்க முடிவதில்லை.விரையில் ஒரு நிரந்தர தீர்வு வரவேண்டும் என்பதினையே அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். புலிகளின் கட்டாயப்படுத்தலாலும், வற்புறுத்தலாலும் மட்டுமே அவர்கள் புலிகளின் கொண்டாண்டங்களுக்கு செல்லுகின்றனர்.

புலிகள் வன்னிக்குள் இருக்கும் சிறுவர் சிறுமிகளை வலுக்கட்டாயமாக இழுத்து செல்வதினால் பெற்றோர்களும் சகோதரர்களும் புலிகள் மீது பெரும் வெறுப்பு கொண்டுள்ளார்கள்.புலிகள் இவ்வாறு வலுக்கட்டாயமாக பிள்ளைகளை இழுத்து செல்ல வந்தபோது சில பெற்றோர்கள் தமது கண்ணுக்கு பட்ட கத்திகள் பொல்லுகளை கொண்டு தாக்கிய சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. புலம் பெயர் தமிழர்களின் பிள்ளைகள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதினால் ஏனையோர்களின் பிள்ளைகள் தாக்குலுக்கு சென்று மடிவதினை இவர்களினால் ரசிக்க முடிகின்றது.

21 கரும்புலிகள் மடிந்து 13படையினர் மட்டுமா செத்தார்கள் என கேள்வி கேட்பதோடு, முல்லைதீவு போன்று ஆயிரக்கணக்கான படையினர் செத்திருக்க வேண்டும் என இதற்குள் வியாக்கியானம் வேறு பேசுகின்றார்கள். மோதல்கள் குறித்த செய்திகளை கேட்கும் போது இவர்களுக்கு ரம்போ, மிஸ்சிங் இன் அக்ஷன் (Rambo, Missing in Action) போன்ற அடிபிடி திரைப்படங்களை (Action Movies) பார்த்த திருப்தி கிடைக்கின்றது.

தமிழ்செல்வன் கொல்லப்பட்டது அரச விமானப்படை தாக்குதலில் தான் என்பது சந்தேகமில்லாது இருந்த போதும், விமானப்படையினருக்கு துல்லியமாக தமிழ் செல்வனின் இருபிடம் எப்படி தெரிந்தது என்பது சந்தேகத்திற்கு உரிய விடயமாகவே உள்ளது. வன்னிக்குள் வாழும் மக்களுக்கு புலிகள் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கின்ற போதிலும், புலிகளின் உயர்மட்ட தலைவர்களின் மறைவிடங்கள், சந்திக்கும் இடங்கள் என்பன அந்த மக்களுக்கு கூட தெரியாமலே பாதுகாக்கப்படுகின்றது.

ஆகையினால் புலிகளுக்குள் இருப்பவர்களால் மட்டுமே உயர் மட்ட தலைவர்களின் மறைவிடங்கள், சந்திக்கும் இடங்கள், நேரங்கள் என்பன தெரிய வாய்புண்டு. புலிகளின் சர்வதேச தொடர்பு மையத்தில் தமிழ்செல்வன் நின்றிருந்த போதே தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகின்றது. புலிகளுக்குள் இருக்கின்ற தலமைபோட்டியினால் அரசிற்கு புலிகளுக்கு உள்ளே இருந்தே தகவல் வழங்கப்பட்டிருக்கலாம் என சிங்கள பதிரிகையாளர் ஒருவர் ஆங்கில இணையதளத்தில் கூறியிருக்கின்றார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்தபடியாக இருக்கும் தலைவர்களை இல்லாது ஒழிக்கும் நடவ்டிக்கைகளை பொட்டம்மான ஆரம்பித்துள்ளார் என்றும், முதலில் சூசையினை முடமாக்கினார், தற்பொழுது தமிழ்செல்வனை அரச படையினை கொண்டு முடித்திருக்கின்றார், அவரின் அடுத்த இலக்கு இருவர் என்றும், அவர்களில் ஒருவர் புலிகளின் தலைவர் ,மற்றையவர் சார்ள்ஸ் அன்ரனி என்ற பெயருடைய புலிகளின் தலைவருடைய புதல்வர் என்றும் அந்த பத்திரிகையாளர் தனது ஊகத்தினை தெரிவித்து இருக்கின்றார்.

இவரின் கருத்து ஊகமாக இருந்தாலும், புலிகள் இவ்வாறு கடந்த காலங்களில் நடந்து கொண்டமையினால் அவரின் ஊகத்தினை முற்றாக தட்டி கழிக்க முடியாது. புலிகளின் தலமை தமக்கு வேண்டாதவர்கள் என முடிவு செய்து விட்டால் அவர்கள் யாராக இருந்தாலும், தீர்த்து கட்ட தயங்க மாட்டார்கள். அதற்கு எதிரியின் உதவியினை கூட நாடுவார்கள். இதற்கு உதாரணகள் பல இருக்கின்றன.

நீர்வேலி வங்கி கொள்ளையில் ஏற்பட்ட பிணக்கினால் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருடன் பிரபாகரன் முரண்பட்டிருந்தார், கொள்ளையடித்த 90லட்சத்தின் பங்கை தருவதாகவும் ,அதற்கு காத்திருக்குமாறும் கூறிவிட்டு பொலிசாருக்கு புலிகளின் தலைவர் தகவல் கொடுத்திருந்தார்.

முதலில் கிட்டுவிற்கு காலில்லாது செய்தனர். பின்னர் கிட்டு வந்த கப்பலை இந்திய கடற்படையினர் சுற்றி வளைத்திருந்த போது அதற்குள் யார் இருக்கின்றார்கள் என்பது அவர்களுக்கு உறுதியாக தெரியாமல் இருந்தது. கப்பலுக்குள் கிட்டு இருக்கின்றார் என நாம் இந்தியாவிற்கு கூறிய பின்னரும் அவர்கள் அந்த கப்பலை தாக்கினார்கள் என பாலசிங்கம் பின்னர் கூறியிருந்தார். கப்பலுக்குள் கிட்டு இருக்கின்றார் என்பதினை பாலசிங்கமே இந்தியாவிற்கு உறுதிப்படுத்தி இருந்தார். இவர் பிரபாகரனின் உத்தரவிற்கு அமையவே இவ்வாறு கூறியிருக்க வேண்டும்.

1987ஆம் ஆண்டு எதிரியிடம் (பிரேமதசாவிடம்) ஆயுதம் பெற்றுக்கொண்டு இந்திய படையினருடன் மோதலில் ஈடுப்பட்டனர், இதே ஆண்டில் இலங்கை அரசின் துணைப்படையாக நடந்து கொண்டு இராணுவத்தின் உதவியுடன் கொழுப்பில் தங்கியிருந்த புளொட் உறுப்பினர்களை கடத்தி வந்து வெட்டி கொலை செய்திருந்தனர். அரச படையுடன் வந்து புளொட்டினரின் முள்ளிக்குளம் முகாமை தாக்கியிருந்தனர்.

1985 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் இருந்த உமா மகேஸ்வரன் தமது அமைப்பின் சொந்த பாதுகாப்பில் சுழிபுரத்திற்கு சென்ற பொழுது இலங்கை இராணுவத்தினருக்கு புலிகள் தகவல் கொடுத்ததிருந்தனர். (இராணுவத்தினர் ஹெலியில் தாழ்வாக வந்து சுற்றி வழைத்தபோது ஹெலியை தாக்குவதற்கு புளொட் போராளிகள் முற்பட்டிருந்தார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்த உமா மகேஸ்வரன் , நாங்கள் தாக்கிவிட்டு சென்று விடுவோம் பின்னர் படையினர் வந்து இந்த கிராமத்தினை அழித்து விடுவார்கள் என கூறி தடுத்திருந்தமை குறிப்பிட தக்கது). புலிகளின் தலமையினை பொறுத்த மட்டில் தமது உயிர் வாழுதலுக்கு எவரையும், எவரிடமும் காட்டி கொடுக்கவும், அழித்தொழிக்கவும் தயங்காது உள்ளார்கள்.

யார் இந்த தமிழ்செல்வன்?

சுப்பையா பரமு என்ற பிறப்பு பெயர் உடைய தமிழ் செல்வன் 1967 ஆம் ஆண்டு பிறந்ததிருந்தார். 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தினை அடுத்து தினேஷ் என்ற பெயரில் தன்னை புலிகளில் இணைத்துக் கொண்டு, புலிகளின் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவரின் பாதுகவலர்களில் ஒருவராக சில காலம் செயற்பட்டு இருந்தார். புன்னகை புலி (Smiling Tiger) புன்னகை மன்னன (King of Smile) என அழைக்கப்பட்ட தமிழ் செல்வன் புலிகள் இயக்கத்தில் தளபதி, அரசியல்துறை பொறுப்பாளர் என பல பதவிகள் வகித்த போதும் யாழ் மாவட்ட பிஸ்ரல் குழு பொறுப்பாளராக கடையாற்றிய போது அவர் செய்த சாதனைகள் தான் அளப்பரிவை.

இளையவர்கள், நடுத்தர வயதுடையோர் என பாராபட்சம் இல்லாது தமது இயக்கத்திற்கு எதிரானவர்களை எல்லாம் மண்டையில் போட்டவர். இவருக்கு இத்தகைய திறமை இருப்பதினை கண்டு பெருமை கொண்ட புலிதலைவர் இந்திய படையினருடான மோதலின் போது பொட்டம்மானை எப்படியாவது வன்னிக்குள் கொண்டு வந்து சேர்ப்பது உனது பொறுப்பு என கூறிவிட்டு வன்னி சென்றார்.அதே போன்று பாதுகாப்பாக பொட்டம்மானை அவர் வன்னி கொண்டு சேர்த்தும் இருந்தார்.

1993 ஆம் ஆண்டு இடம்பெற்ற பூனைகரி மோதலில் ஈடுபட்ட இவருக்கு ஒரு காலில் கடும் காயம் ஏற்பட்டதினால், ஊன்றுகோலின் உதவியுடன் உலாவ வேண்டி வந்தது. இவரை ஒரு அப்பாவி என பாராளுமன்ற உறுப்பினர் சமபந்தன் கூறியிருப்பது பரிகாசத்திற்கு உரிய விடயமாகிறது. அவருடைய இராணுவ செயற்பாட்டிக்காக புலிகளே இராணுவ உயர்மட்ட பிரிகெடியர் பட்டத்தினை வழங்கியிருக்கும் போது இவரை அவர் அப்பாவியென கூறுகின்றார்.ஏதனையாவது கூறவேண்டும் என்பதற்காக பேசுகின்றார்கள் போல் தெரிகின்றது.

ஆயுதங்களுடன் தொடர்பில்லாத, தற்கொலை தாகுதல்களை நிகழ்த்தாத , இராணுவ நடவடிக்கைகளை எதனையுமே செய்யாத ஒரு அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் கொல்லப்பட்டு விட்டார் என்கின்ற தோரனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், புலிகளின் ஊடகங்களும் அழுது தொலைக்கின்றார்கள். சில நாட்களுக்கு முன்னர் எந்த அமைப்பு அரசின் அனுராதபுர விமான தளம் மீது தற்கொலை தாக்குதலை நிகழ்த்தியதோ அந்த அமைப்பின் உயர்மட்ட தலைவர் ஒருவரேயே அரச விமான படையினர் இலக்கு வைத்து தாக்கியுள்ளார்கள்.

அரசின் வர்த்தக மையங்களை தாக்குவோம் என மிரட்டும் ஒருவரை அரசியல்துறை பொறுப்பாளரென கூற முடியுமா? காலம் சென்ற பாலசிங்கம் அவர்கள் கொடுந்தமிழை பாவித்தாலும் புலிகள் இயக்கத்தில் ஆயுதங்களை கையில் எடுக்காது அரசியல் பேசிய ஒருவரென்று கூறலாம். தமிழ் செல்வனை பொறுத்த வரையில் இறக்கும்வரையில் சில படை பிரிவுகளுக்கு பொறுப்பாக இருந்துள்ளார்.

எதிரிகள் மீது தாக்குதலை நிகழ்த்தும் ஒரு இராணுவ அமைப்பு எதிர்தாக்குதலையும் எதிர்பார்த்தே இருக்க வேண்டும். புலிகள் தம்மிடம் இருக்கும் இறுதி ஆயுதமான கரும்புலிகளை அனுப்பி தாக்குதலை நடத்தினார்கள்.இதற்கு பதிலடியாக படையினர் விமான தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள். தாம் மட்டும் தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் , ஆனால் அரசு அதனை கண்டிப்பதோடு நிறுத்த வேண்டும் என்று புலிகள் எதிர்பார்கின்றார்கள்.

சுழிபுரத்தில் திருமணம் முடித்த சு.ப

வட மாகாணத்தில் கரையோரமாக மாதகலுக்கு நெருக்கமாக உள்ள சுழிபுரம் முன்னர் புளொட் இயக்கத்தின் கோட்டையாக இருந்தது. அந்த இயக்கத்தின் ஆணி வேராக இருந்த புதியபாதை ஆசிரியர் தோழர் சுந்தரமும் சுழிபுரத்தினை சேர்ந்தவரேயாவார். இங்கு தாழ்த்தப்பட்ட சமூகம் என்று அழைக்கப்படுகின்ற (தலித்துக்கள்) சமூகத்தினை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், உயர்ந்த சாதியினர் என்று தம்மை அழைக்கும் குடும்பத்தினை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருந்தது. புளொட் இயக்கத்தினர் இந்த காதலுக்கு ஆதரவு கொடுத்து திருமணம் முடிக்கவும் உதவி புரிந்திருந்தனர். இதனால் புளொட் இயகத்தினர் மீது கோபம் கொண்ட பெண்ணின் குடும்பத்தினை சேர்த ஒரு பெண்மணி அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக புலிகளை அழைத்து வந்து தனது காணிக்குள் தங்க வைத்தார்.

அங்கு வந்து சென்ற தமிழ்செல்வன் பின்னர் அந்த பெண்மணியின் மகள் மீது காதல் கொண்டு அழைத்து சென்றார். தமிழ்செல்வன் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் முடித்தாக சிலர் கூறுகின்ற போதிலும் அதற்கான ஆதாரம் இல்லை. மொத்தத்தில் பாலுக்கு பூனையை காவல் வைத்தது போன்று அந்த பெண்மணியின் கதை ஆகிப்போனது.

புலி தலைவர்களின் திருமணங்கள் சீர்சிருத்தமானவை, உண்ணாவிரதம் இருந்த பெண்ணை காப்பாற்றுவதாக கூறி கடத்திச் சென்று காதல் கொண்டார் புலிகளின் தலைவர், புலிகளின் வான்பிரிவை ஆரம்பித்த சங்கர் தனது சகோதரரின் மனைவியை கை பிடித்தார், மாத்தையா இயக்க தோழர் சீலனின் மனைவிக்கு வாழ்க்கை கொடுததிருந்தார். இவ்வாறாக தமிழ் சமூகத்திற்கு எடுத்து காட்டாக இவர்களின் திருமணங்கள் அமைந்து விட்டது.

புலிகளின் சூளுரைப்பு

தமிழ் செல்வனின் கொலைக்கு பதிலடி என்ன என்பதினை நாம் பேச மாட்டோம் ,ஆனால் செயலில் காட்டுவோம் என புலிகளின் இராணுவ பேச்சாளார் கூறியதாக பி.பி.சி இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது . (The Tamil Tigers’ spokesman, Rasiah Ilanthiriyan, told the BBC the group’s response to the killing would be in deeds> not words.)

எம்மால் புலிகளை ஒவ்வொருவாரக இலக்கு வைக்க முடியும்,அவர்கள் தம்மை பாதுகாக்க வேண்டும் எனில் , தமது மறைவிடங்களை மாற்றியாக வேண்டும், இவ்வாறு அரச பாதுகாப்பு செயலாளர் கோதாபெய ராஜபக்ஷ மார்பு தட்டியுள்ளார். (If we want we can take them one by one, so they must change their hideouts ) மாவீரர் உரைக்கு முன்னர் புலிகள் நிட்சயம் பதிலடி கொடுப்பார்கள்,ஆனால் பதிலுக்கு புலிகள் பூனைகரியை இழக்க நேரிடும். புலிகள் இயக்கத்தில் யுத்த களத்தில் அனுபவம் உடைய, நன்கு பயிற்ச்சி பெற்ற போராளிகள் மூவாயிரம் மட்டிலேயே இருப்பதாக நம்பப்படுகின்றது. புதிதாக சேர்கப்பட்டவர்களின் தொகையே அதிகமாக உள்ளது.

படையினர் முன்னேறினால் உங்கள் உடல்களை தாண்டித்தான் வரவேண்டும்,நீங்களாக பின்வாங்க கூடாது என புலிகள் புதியவர்களுக்கு எச்சரித்து உள்ளார்கள். படையினர் கல்முனையை கைப்பற்றி பின்னர் பூனைகரியை கைப்பற்றும் நோக்கத்தில் இருப்பதாக புலன்படுகின்றது. இதற்கு முன்னால் புலிகள் சிங்கள மக்களுக்கு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி ஒரு இனக்கலவரத்தை உண்டு பண்ண முயற்சிப்பார்கள்.

Thanks…THENEE.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post அவுஸ்திரேலியா மண்ணில் முரளிதரன்; சாதனைக்கு வந்த சோதனை!!