நிர்மாணத்துறை அனுபவங்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்!!
தற்போதைய நிர்மாணத் தொழிற்துறை அறிவு புதிய தொழில்நுட்பங்களுடன் முழுமையாக வளம் பெற்றுள்ளபோதும் அவ்வறிவை உள்நாட்டு நிர்மாணத்துறையில் நாம் பயன்படுத்தும்போது பண்டையகால அறிவையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்மென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
உலகின் வேறெந்த ஒரு நாட்டுக்கும் இரண்டாம் பட்சமாக இல்லாமல்; கடந்தகால இலங்கையின் நிர்மாணத்துறை வரலாற்றில் ´லோவமகாபாய´ போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிர்மாணப் பணிகள் குறித்து வரலாற்று நூல்களை ஆய்வு செய்கின்றபோது அது நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை நிர்மாணத்துறை சங்கத்தின் 15வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) பிற்பகல் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி தெரிவித்தார்.
நிர்மாணத்துறையில் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் நிர்மாணத்துறை தொடர்பான அறிவைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இலங்கை தேசிய நிர்மாண சங்கம் ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும். எமது நாட்டில் இரும்பு பாவனை வரலாறு கிறிஸ்த்துக்கு முற்பட்ட காலத்திற்கு செல்வதாக நினைவுகூர்ந்த ஜனாதிபதி, எமது பண்டைய அரசர்கள் 34,000க்கும் மேற்பட்ட குளங்களை நீர்ப்பாசனத்திற்காக அமைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நிர்மாணத்துறையில் நூற்றாண்டுகால பழைமை வாய்ந்த இலங்கை அனுபவம் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் இச்சந்தர்பத்தின்போது தெரிவித்தார்.
நிர்மாணத்துறையில் ஒரு தேசிய கொள்கை மற்றும் திட்டத்தின் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இது அரச மற்றும் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் செய்யப்படும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி இது தொடர்பில் தனியார் துறைக்கு ஒரு திறந்த அழைப்பையும் விடுத்தார்.
திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினையை தேசிய நிர்மாண சங்கம் சுட்டிக்காட்டியபோது அப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். இப்பிரச்சினைக்கு அரசாங்கம் ஒரு தீர்வை வழங்கும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
அமைச்சுக்களின் செயலாளர்கள், நிர்மாண சங்கத்தின் தலைவர் தேசமானிய எஸ்.டி.லியனாராச்சி ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
Average Rating