யாழ் மாவட்ட புளொட் ராஜன் புலிகளால் படுகொலை
யாழ் மாவட்ட புளொட் அமைப்பின் அரசியல்பிரிவின் மூத்த உறுப்பினரும், முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான தோழர் ராஜன் என அழைக்கப்படும் செபஸ்டியன் இருதயராஜன் (வயது 46) புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 12.07.2006 பிற்பகல் 2.15 மணியளவில் மாட்டின் வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு சமீபமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ள 2006 உள்ளுராட்சி சபை தேர்தலில் யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளராக புளொட் அமைப்பின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் பிள்ளைகளுக்கு மதிய உணவை வாங்கிங்கொண்டு சைக்கிளில் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தபோதே புலிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தி;ன் பின்னர் பல புளொட் இயக்க உறுப்பினர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு வந்தபோதும் நோய்வாய்ப்பட்டிருந்த மனைவி, பிள்ளைகளின் கல்வி என்பவற்றை உத்தேசித்து தனது குடும்பத்தினருடனேயே தங்கியிருந்தார். இன்று அவரது குடும்பம் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மக்களுடன் நெருங்கிய உறவை கொண்டிருந்ததுடன் மக்கள் மத்தியில் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்தவர். பொதுமக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து அவர்களின் துன்ப துயரங்களில் கவனம் செலுத்தி கட்சிக்கூடாகவும், கட்சிக்கு புறம்பாகவும் தன்னால் முடிந்த உதவிகளை செய்துவந்தார். மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் ஐக்கியப்பட்டு செயற்பட வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தார். ஆனால், வடக்கு கிழக்கில் நிலவிய ஜனநாயகமற்ற சூழல் அவரை கட்டிப்போட்டிருந்தது.
அவரது ஆழுமைக்கும், ஆற்றலுக்கும் தடையாக இருந்தது. கிளிநொச்சி உருத்திரபுரத்தை சொந்த இடமாகக் கொண்ட தோழர் ராஜன் தனது இளம் வயதிலிருந்தே புளொட் அமைப்பின் பல்வேறு முன்னணி அமைப்புக்களுடாகவும் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு தமிழ் பேசும் மக்களின் அரசியல் சமூக பொருளாதார விடுதலைபற்றிய நம்பிக்கைகளுடன் தொடர்ந்து உழைத்தவர்.
தமிழர் போராட்டம் தொடர்பான தெளிவும், அனுபவமும் மிக்க தோழர் ராஜனின் இழப்பு தமிழ் மக்களின் சீரிய அரசியல் போக்கிற்கு பெரும் இழப்பாகும். ஜனநாயகம், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் வலியுறுத்தி வந்த அவரது இழப்பு ஜனநாயகம் மனித உரிமைகளை நேசிக்கும், அதற்காகக் குரல்கொடுக்கும் அனைவருக்கும் பின்னடைவாகும்.
Thanks..Eprlf.net