திருப்பதியில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை தலைமுடியை சீனா, ஜப்பானில் விற்பனை செய்ய ஏற்பாடு!!
திருமலை–திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி திருமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
திருப்பதியை அழகுப்படுத்துவதுபோல், திருமலையையும் அழகுப்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறோம். ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 300 ரூபாய் டிக்கெட் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை நேரடியாக வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம் தங்கும் விடுதிகளில் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
திருமலையில் உள்ள நாராயணகிரி பூங்காவில் ஆயிரங்கால் மண்டபம் கட்ட ஆந்திர மாநில முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடு வலியுறுத்தி வருகிறார். அவரின் ஆலோசனைபடி ஆயிரங்கால் மண்டபம் விரைவில் கட்டப்படும். திருப்பதி நகரை அழகுபடுத்த தேவஸ்தானம் சார்பில் ரூ.10 கோடி வழங்கப்படும். திருமலையில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக கூடுதல் கட்டிடம் கட்டப்படும். தேவஸ்தான ஊழியர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கு ஆந்திர அரசு வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
தேவஸ்தானத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தலைமுடி காணிக்கை இ.டெண்டர் மூலமாக விற்பனை செய்து வருகிறோம். ஏலம் எடுப்பவர்கள் தலைமுடியை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். எனவே தேவஸ்தானமே சீனா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகிறது. இதனால், தேவஸ்தானத்துக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.
திருப்பதியை அடுத்த மங்கலம் பகுதியில் கோவிந்தநாமம் இடத்தில் மின் மயானம் அமைக்க நகராட்சி அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் அனுமதி கொடுத்ததும் விரைவில் மின்மயானம் அமைக்கப்படும். கபிலத்தீர்த்தம் பகுதியில் சாலை ஓரம் நீர் ஊற்று அமைக்கப்பட உள்ளது. திருப்பதியில் சாலை ஓரம் சங்கு, சக்கரம் அமைக்கப்பட உள்ளது. 24 மணிநேரமும் ஏழுமலையான் பக்தி பாடல்கள் ஒலி பரப்ப ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
திருப்பதியை அடுத்த பேரூரில் மலை மீது ஏழுமலையானின் தாயார் வகுளமாதாதேவி கோவில் உள்ளது. அந்த கோவிலை சீரமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அங்கு தேவஸ்தானம் சார்பில் கடைகள் வைக்கப்பட உள்ளது. திருமலையில் உரிமம் இல்லாமல் செயல்படும் கடைகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். திருமலை, திருப்பதி பகுதிகளில் பக்தர்களுக்கு குறையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதற்காக தேவஸ்தானம் சார்பாகவே குழாய்கள் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
அப்போது தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ், அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ்ரெட்டி, மக்கள் தகவல் தொடர்பு அலுவலர் ரவிகுமார், துணை அதிகாரி நீலிமா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Average Rating