ஏழு ரூபாய் பால் பாக்கெட்டுக்கு அடித்தது ரூ.5 லட்சம் “ஜாக்பாட்”
பால் பாக்கெட் கசிந்து, பால் குறைந்திருந்தால், நீங்கள் புலம்புவீர்கள்… ஆனால், பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர், நுகர்வோர் கோர்ட்டுக்கு போய், ரூ.ஐந்து லட்சம் “ஜாக்பாட்’ அடித்துள்ளார்! சண்டிகாரில் வசிப்பவர் டாக்டர் ராஜிந்தர் சிங்லா; கடையில் இவர் வாங்கிய அரை லிட்டர் பால் பாக்கெட்டில் பால் கசிந்திருந்தது. அதனால், 140 மில்லி பால் குறைந்திருந்ததை கண்டுபிடித்தார். அதை, அதே தினம், அப்படியே கொண்டு போய், சண்டிகார் பால் கூட்டுறவு அலுவலகத்தில் காட்டினார். அதிகாரிகள் அதை பார்த்து விட்டு, “பாக்கெட்டில் கசிந்தது என்று என்ன ஆதாரம் இருக்கிறது?’ என்று கேட்டு திருப்பி அனுப்பிவிட்டனர். ஆனால், ராஜிந்தர் விடுவதாக இல்லை. அங்கிருந்து நேராக, அரசு சார்பில் இயங்கும், “எடை சரிபார்ப்பு’ மையத்துக்கு சென்றார். அங்கு, அளவு குறைந்த பால் பாக்கெட்டை கொடுத்து, அதன் எடையை போட்டு, சான்றிதழ் வாங்கிக்கொண்டார். பின்னர், சண்டிகார் நுகர்வோர் கோர்ட்டுக்கு போனார். கோர்ட்டில் மனு செய்து, அதற்கு ஆதாரமாக, அளவு குறைந்த பால் பாக்கெட்டையும் சமர்ப்பித்தார். வழக்கை உடனடியாக எடுத்துக்கொண்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி குப்தா, “வாடிக்கையாளர், ஆதாரத்துடன் நேரில் போய் கேட்டும், பால் நுகர்வோர் கூட்டுறவு அதிகாரிகள் அலட்சியம் செய்தது சரியல்ல’ என்று கூறினார். பால் கூட்டுறவு அமைப்பின் அதிகாரிகள், “தானியங்கி இயந்திரம் மூலம், பால் பாக்கெட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் தவறு நேர மனிதர்கள் யாரும் காரணமாக முடியாது. ஊழியர்கள் யாரும் தவறு செய்ய வாய்ப்பில்லை’ என்று, மிஷின் மீது பழியை போட முயன்றனர். ஆனால், நீதிபதி குப்தா இதை நிராகரித்தார். “நீங்கள் காட்டிய அலட்சியத்தை மறைத்து, மிஷின் மீது பழி போடுவது தவறான முன்னுதாரணம். இதற்கா, ராஜிந்தருக்கு ரூ.ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும்’ என்று தீர்ப்பளித்தார்.