தீபாவளிக்கு கமல், அஜீத், விக்ரம் படங்கள் வெளியாகாததால் ரசிகர்கள் சோகம்!!
தீபாவளிக்கு கமல், அஜீத், விக்ரம் படங்கள் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்தாண்டு தீபாவளிக்கு விஜய் நடித்த “அழகிய தமிழ்மகன்’, சூர்யாவின் “வேல்’, சத்யராஜின் “கண்ணா மூச்சு ஏனடா’, தனுஷின் “பொல்லாதவன்’, ஜீவனின் “மச்சக்காரன்’ மற்றும் சில படங்கள் வெளியாகின்றன. மதுரை போன்ற நகரங்களில் விஜய், சூர்யா படங்கள் வெளியிடுவதில் தியேட்டர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியாக மதுரை குரு, சினிப்ரியா, வெற்றி, அண்ணாமலை தியேட்டரில் “அழகிய தமிழ் மகன்’ படமும், அம்பிகா, ஜெயம், நடனா, சக்தியில் “வேல்’ படமும் திரையிடப்படுகிறது. அதேபோல் மினிப்ரியா, தேவி கலைவாணியில் “கண்ணாமூச்சி ஏனடா’, அம்பிகை, தமிழ் ஜெயா, சோலைமலையில் “மச்சக்காரன்’, அமிர்தம், மதி, அபிராமி, சுகப்ரியாவில் “பொல்லாதவன்’ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. இதுதவிர சிறிய பட்ஜெட் படங்களும் சில தியேட்டர்களில் திரையிடப்படுகின்றன.அதேசமயம்”தசாவதாரம்’, “பில்லா’, “பீமா’ படங்களின் ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இது கமல், அஜீத், விக்ரம் ரசிகர்களுக்கு இடையே ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. பொதுவாக ரஜினி படம் தீபாவளியின்போது வெளியாகாத பட்சத்தில், “கருப்பு தீபாவளி’ என்று கூறி ரசிகர்கள் தீபாவளியை கொண்டாடுவதில்லை. இந்தாண்டு அவரது ரசிகர்களை பொறுத்தவரை கருப்பு தீபாவளியாக அமைந்துள்ளது. அதேபோல் அஜீத் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். “தல இல்லாத தீபாவளி எங்களுக்கு தேவையில்லை’ என்ற ரீதியில் போஸ்டர்களை ஒட்டியும், பிளக்ஸ் போர்டுகளை வைத்தும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே காலை 9.30 மணி முதல் நள்ளிரவு 1.30 மணிக்குள் 5 காட்சிகள் திரையிடவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணத்தில் டிக்கெட் விற்கவும் தியேட்டர் நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் அண்ணாமலை கூறுகையில், 5 காட்சிகள் திரையிட அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம். ரசிகர்கள் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் முதல் காட்சி நடப்பது சந்தேகமே. அரசு நிர்ணயித்துள்ள கட்டணமான ரூ.10 முதல் 50 வரை மட்டுமே டிக்கெட் வழங்குவோம் என்றார். புதுப்படங்கள் திரையிடப்படுவதையொட்டி தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.