திருடு போன கன்றுக்குட்டிகளை கண்டுபிடிக்க போலீசார் நடத்திய “அடையாள அணிவகுப்பு”
காணாமல் போன பசுக்களையும் கன்றுகளையும் கண்டுபிடிக்க, பீகார் போலீசார் புதிய ஐடியா தான், “அடையாள அணிவகுப்பு!’ குற்றவாளிகளை கண்டுபிடிக்க பலரை வரிசையாக நிற்க வைத்து, அடையாள அணி வகுப்பு நடத்துவது போலீசாரின் வழக்கம். ஆனால், காணாமல் போன பசுக்களை கண்டுபிடிக்கவும் இதே நடைமுறையை பின்பற்றி உள்ளனர் பீகார் போலீசார். போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சையா மர்சையா கிராமத்தை சேர்ந்தவர் ஜகதீஷ் யாதவ். இவருக்கு சொந்தமான ஐந்து பசுக்களும், நான்கு கன்றுக்குட்டிகளும் திருடு போய் விட்டன. இது தொடர்பாக போலீசாரிடம் புகார் செய்தார். விசாரணையில் கிடைத்த தகவல்களை தொடர்ந்து, 10 நாட்களுக்கு பிறகு, சக்கி நவுரங்கா கிராமத்தை சேர்ந்த ஜடுலி தாக்கூர் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர் போலீசார். இதில், நான்கு கன்றுக்குட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அது தனக்கு சொந்தமானது என்றும், பல நாட்களுக்கு முன்பே அவற்றை வாங்கி விட்டதாகவும் வாதிட்டார் ஜடுலி தாக்கூர். குழப்பமடைந்தனர் போலீசார். சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. கன்றை வளர்த்தவர்களுக்கு அதன் அடையாளம் நன்றாக தெரியும் என்பதால், அடையாள அணி வகுப்பு நடத்தி சோதித்து பார்த்தால் என்ன என்று பேலீசாரில் ஒருவருக்கு தோன்ற, அதை செயல்படுத்த முடிவு செய்தார் போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்த். எதையும் முறைப்படி செய்ய வேண்டும் என்ற கொள்கை உள்ள ஸ்ரீகாந்த் சிங், இதற்காக நீதிமன்றத்திடமும் அனுமதி பெற்றார். நிறைய கன்றுக்குட்டிகளுடன் பிடிபட்ட கன்றுகளை சேர்த்து நிறுத்தி, அடையாள அணிவகுப்பு நடத்தினார். புகார் கொடுத்த ஜகதீஷ் யாதவும், போலீசார் சந்தேகித்த ஜடுலி தாக்கூரும் கன்றுக்குட்டிகளை உற்று உற்று பார்த்தனர். கடைசியா என்ன நடந்தது தெரியுமா… இருவராலுமே தங்களின் கன்றுக் குட்டிகள் எவை என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசார் இடிந்து போய் உட்கார்ந்து உள்ளனர்.