எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு கருணாநிதி வாழ்த்து!!
இலங்கை நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற தேர்தலில், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழர் தேசிய கூட்டமைப்பு 16 உறுப்பினர்களைக் பெற்று, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இடம் வகித்தது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மூன்றாவது கட்சியான தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கப் பெற்று, இரா.சம்பந்தன், எதிர்க் கட்சித் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
38 ஆண்டுகளுக்கு முன்பு 1977–ம் ஆண்டு எனது அருமை நண்பர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்த நாவலர் அமிர்தலிங்கத்திற்குப் பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது.
இலங்கைத் தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவு காலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கியிருக்கும் வேளையில், எதிர்க் கட்சித் தலைவராக சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் நம்பிக்கையைத் தருகிறது.
சம்பந்தனும் இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும், அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்று கூறியிருப்பதும் மகிழ்ச்சியைத் தருகிறது.
சம்பந்தனுக்கு தி.மு.க.வின் சார்பில் இதயமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
Average Rating