மவுனத்தை கலைத்தார் நயன்தாரா
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி தனது பிறந்த நாளையட்டி பத்திரிகைகளுக்கு பரபரப்பு பேட்டி அளித்த நயன்தாரா, பிறகு மீடியாக்களிடம் பேசுவதைத் தவிர்த்து வந்தார். இந்நிலையில், ஒருவருட இடைவெளிக்குப் பிறகு நேற்று மனம்திறந்து பேசினார். நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: தற்போது திருநெல்வேலியில் படப்பிடிப்பில் இருக்கிறேன். அஜீத்துடன் ‘பில்லா’, விஷாலுடன் ‘சத்யம்’, தனுஷ§டன் ‘யாரடி நீ மோகினி’ படங்களில் நடித்து வருகிறேன். எல்லா படங்களிலும் நல்ல கேரக்டர். தெலுங்கில் நான் நடித்து வெளியான ‘துபாய் சீனு’, ‘துளசி’ ஆகிய படங்கள் சமீபத்தில் ஹிட்டாகியுள்ளன. தமிழில் அதிக கவனம் செலுத்த முடியாதது உண்மைதான். அதற்கு என் சொந்த வாழ்க்கையும் காரணம். இதனால்தான் மீடியாக்களிடம் பேசாமல் இருந்தேன். எனது தனிப்பட்ட விஷயங்கள் முக்கியமானதாக எனக்கு அப்போது தோன்றியது. ஆனால், அது அதிகமாக என்னைக் காயப்படுத்திவிட்டது. அது காதலா? வேறு விஷயமா என்பதை சொல்ல விரும்பவில்லை. சில விஷயங்களை மறக்க நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் மீடியாக்கள் அதை எழுதி என்னை காயப்படுத்தி வருகின்றன. சினிமாவில் இது சகஜம் என்றாலும், நானும் ஒரு பெண், ஒரு நடிகை என்ற முறையில் மனரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டேன். நானும் சாதாரண மனுஷிதான். எல்லோரையும் போல எனக்கும் உணர்வு இருக்கிறது. வீண் விஷயங்களை தவிர்ப்பதற்காகவே யாரிடமும் ஒரு வருடம் பேசமால் இருந்தேன். இப்போது ஓரளவு என் மனதைத் தேற்றிக்கொண்டேன்.
‘பில்லா’ மற்றும் தெலுங்கில் ‘துளசி’ படங்களில் கிளாமராக நடித்துள்ளதாகக் கூறுகிறார்கள். பாடல் காட்சிகளில் கலர் கலர் உடைகளில் வருவது கிளாமரா? எனக்கு அப்படித் தோன்றவில்லை. சினிமாவில் சக நடிகைகளுடன் எனக்கு எந்தப் பிரச்னை இல்லை. விஜய்யின் ‘குருவி’ படத்தில் நான் ஒப்பந்தமானது குறித்து கேட்கிறீர்கள்.
அதில் இப்போது த்ரிஷா நடிக்கிறார். அதற்குமேல் அதுபற்றி பேச விரும்பவில்லை. என் வாழ்க்கையில் மீண்டும் காதல் வருமா என்று எனக்குத் தெரியாது. ஏன் அதைப் பற்றியே கேட்கிறீர்கள்? இந்த வருடம் எனது பிறந்த நாளை கொச்சியில் என் குடும்பத்தினருடன் விமரிசையாகக் கொண்டாட இருக்கிறேன். இவ்வாறு நயன்தாரா சொன்னார்.