போப் ஆண்டவருக்கு தங்கவாள் பரிசு: சவுதி அரேபியா மன்னர் வழங்கினார்
சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா வாடிகன் நாட்டுக்கு சென்று போப் ஆண்டவரை சந்தித்து பேசினார். அப்போது போப் ஆண்டவருக்கு தங்கவாள் ஒன்றை மன்னர் பரிசாக அளித்தார். சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா அமெரிக்கா சென்று ஜனாதிபதி புஷ்சை சந்தித்துப்பேசியபிறகு, அவர் வாடிகன் சென்றார். அங்கு அவர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவர் பெனடிக்ட்டை சந்தித்தார். அவர்கள் இருவரும் சந்திப்பது இது தான் முதல் முறை ஆகும். அப்போது அவருக்கு தங்கவாள் ஒன்றை பரிசாக அளித்தார். அதோடு பனைமரத்தின் தங்கச்சிலையையும், ஒட்டகத்தின் மீது சவாரி செய்யும் மனிதனின் வெள்ளிச்சிலையையும் பரிசாக அளித்தார். சிலைகளை பார்த்துவிட்டு, அதன் கலைநயத்தை பாராட்டினார். தங்கவாளை அவர் கையால் தொட்டார். மன்னருக்கு போப் ஆண்டவர் தங்கப்பதக்கத்தை பரிசாக அளித்தார். மன்னருக்கு தன் இரு கைகளாலும் அவர் ஆசி வழங்கினார். முன்னதாக இருவரும் போப் ஆண்டவரின் நூலகத்தில் 30 நிமிடம் தனியாக பேசினார்கள். சவுதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து மதத்தினருக்கும் வளமும் நலமும் கிடைக்க போப் ஆண்டவர் வாழ்த்தினார். சவுதி அரேபியாவில் 8 லட்சத்து 90 ஆயிரம் கத்தோலிக்கர்கள் பணிபுரிவதாகவும், அவர்கள் சவுதி அரேபியாவின் நலனுக்கு பாடுபடுவதாகவும் போப் ஆண்டவர் தெரிவித்தார். அதன்பிறகு சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களின் மத உரிமைகள் பற்றி போப் ஆண்டவர் எடுத்துக்கூறினார்.