பாலக்காடு அருகே விபத்தில் பலியான கர்ப்பிணி பெண்: வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் மீட்பு!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயலூர் பயனக்கோடு பகுதியை சேர்ந்தவர் தினோ மேத்யூ. இவரது மனைவி தீஷா (வயது 32). இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
மேத்யூ நேற்று மாலை 6 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் ஆலத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மனைவி தீஷாவை பரிசோதனைக்காக அழைத்து சென்றார்.
மோட்டார் சைக்கிள் பயனக்கோடு பகுதியில் சென்ற போது தினோ மேத்யூவின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி ரோட்டோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு ஒரு ஆட்டோவில் ஆலத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தினோ மேத்யூவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
மேலும் தீஷாவை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஆனால் அவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து தீஷாவின் வயிற்றில் இருந்த குழந்தையை உயிருடன் எடுத்தனர். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தீஷாவின் உடல் அதே ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating