கோவை: குறைந்த விலைக்கு மது விற்கக்கோரி உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி போதை வாலிபர் தற்கொலை மிரட்டல்!!
திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டியை சேர்ந்தவர் தமிழரசன். இவர் கோவை ரத்தினபுரியில் தங்கி தினக் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை போதையில் இருந்த தமிழரசன் காந்திபுரம் 100 அடி ரோட்டில் 9–வது வீதிக்கு வந்தார். அங்கு உள்ள உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு கூடினர். அவர்கள் தமிழரசனை கீழே இறங்கி வரும்படி கூறினர். அதற்கு அவர் தமிழக அரசு எனது கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே கீழே இறங்கி வருவேன்.
இல்லையென்றால் இங்கிருந்து தற்கொலை செய்து கொள்வேன் என மீண்டும் மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மின்கோபுரத்தில் இருந்த தமிழரசனிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டத்துக்கு தீர்வு கிடைக்கவில்லை. தமிழரசன் தொடர்ந்து மின்கோபுரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு கூடி இருந்த பொதுமக்கள் சமயோஜிதமாக யோசித்தனர்.
ஒரு வெள்ளைத்தாளை எடுத்து வந்து தமிழரசனிடம் பேசினர். அவரிடம் உங்கள் கோரிக்கையை கூறுங்கள். தமிழக அரசுக்கு விண்ணப்பம் தயார் செய்யலாம் என்று கூறினர். அதை கேட்ட தமிழரசன் தமிழகத்தில் மதுக்கடைகளை அரசு மூடக்கூடாது. மதுபானங்கள் விலை அதிகமாக உள்ளது. எனவே அரசு மதுவிலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை கூறினார்.
அவற்றை எழுதிய அவர்கள் அதில் கையொப்பமிட்டனர். பின்னர் தமிழரசனிடம் இந்த கோரிக்கை விண்ணப்பத்தில் நாங்கள் அனைவரும் கையெழுத்து போட்டு விட்டோம். நீ மட்டும் கையெழுத்து போடவில்லை. நீயும் போட்டு விட்டால் இந்த விண்ணப்பத்தை மாவட்ட கலெக்டர், அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கூறலாம்.
கீழே இறங்கி வந்து கையெழுத்து போட்டு விட்டு மீண்டும் மின்கோபுரத்தில் ஏறி போராட்டத்தை தொடரலாம் என்று கூறினர். இதை உண்மை என நம்பிய தமிழரசன் கையெழுத்து போட ஆவலாக கீழே இறங்கி வந்தார்.
அங்கு தயாராக காத்திருந்த போலீசார் தமிழரசனை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு தூக்கி சென்றனர். அங்கு போதையில் இருந்த தமிழரசனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழரசனின் போராட்டம் காரணமாக காந்திபுரம் பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது.
Average Rating