இண்டர்நெட்டில் காதல் வளர்த்த ஜோடி வயது வித்தியாசம் பாராமல் திருமணம்
இனம், மொழி, தேசம் கடந்து இண்டர் நெட் மூலம் வளர்ந்த காதல், நீண்ட வயது வித்தியாசத்தையும் மீறி திருமணத்தில் முடிந்தது. 52 வயது ஆஸ்திரேலிய பெண்ணை 28 வயது திருச்சி வாலிபர் திருமணம் செய்து கொண்டார். திருச்சி ராம்ஜிநகர் கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (28). மருந்து விற்பனை பிரதிநிதி. இன்டர்நெட் “சாட்டிங்’ செய்வதில்ஆர்வம் மிக்கவர். பள்ளி நாட்களிலே சாட்டிங் செய்தவருக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த வாகன்மரிக்கா என்ற பெண் அறிமுகம் ஆனார். தினமும் “சாட்டிங்’கில் பேசினர். பிரபல ஆஸ்திரேலியா நிறுவனத்தில் வாகன்மரிக்கா நல்ல பணியில் இருந்து வருகிறார். பல லட்சம் சம்பளம் பெறும் அவருக்கு, பல கோடி மதிப்பு சொத்து உள்ளது. திருமணத்தில் ஆர்வம் இன்றி இருந்த அவருக்கு வயது 52. இந்திய கலாசாரம் மீது பற்றுதல் கொண்டு சாட்டிங்கில் அது பற்றி தெரிந்து கொண்டார். நீண்ட நாள் சாட்டிங் அவர்களிடையே காதலை வளர்த்தது. திருமணம் செய்ய விரும்பிய ஆஸ்திரேலியப் பெண், வயது ஏற்றத்தாழ்வு பற்றி கவலைப்படவில்லை. கருப்பண்ணனுக்கு பயம். இது நடக்கிற விஷயமா என்று பயந்து நடுங்கிய அவர், “சாட்டிங்’ தொடர்பை நிறுத்தி விட்டார்.
மீண்டும் இருவரும் பேசினர். காதல் தீயை மனதில் வளர்த்த ஆஸ்திரேலியப் பெண், கடந்த 1999ல், கருப்பண்ணன் வீடு தேடி வந்துவிட்டார். வயது வித்தியாசத்தால் கருப்பண்ணன் குடும்பத்தினர், திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏமாந்த பெண் ஆஸ்திரேலியா திரும்பினார். பின் அடுத்தடுத்து இரண்டு முறை இந்தியா வந்தார். காதல் தொடர்ந்து கொண்டே இருந்தது. கடந்த மாதம் திருச்சி வந்தவர், கருப்பண்ணனின் பெற்றோரை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார்.
கடந்த அக்.,27 ம் தேதி திருச்சியில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. உறவினர்கள் பலரும், மணமக்களை வாழ்த்தினர். இனம், மதம், மொழி, நிறம், வயது என ஏகப்பட்ட வித்தியாசங்களை கொண்ட இந்த தம்பதிக்கு, தலை தீபாவளி. இதைக் கொண்டாடியபின் இந்த தம்பதி, ஆஸ்திரேலியா பறக்கின்றனர்.