அரசியலமைப்பு சபை முதல் முறையாக இன்று கூடுகிறது!!
19வது திருத்தச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சபை இன்று முதல் தடவையாக கூடவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (10) பகல் 12 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது.
எட்டாவது பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு சபை பிரதிநிதிகளாக நேற்று மூவர் நியமிக்கப்பட்டனர். ஜனாதிபதியின் பிரதிநிதியாக பாரிய நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் பிரதமரின் நேரடி பிரதிநிதியாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும், விஜித்த ஹேரத் ஆகிய மூவருமே நேற்றைய தினம் நியமிக்கப்பட்டவர்களாவர்.
எட்டாவது பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு சபை பிரதிநிதிகளை நியமிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய சம்பந்தப்பட்டவர்களிடம் எழுத்து மூலம் கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கமையவே நேற்று இவர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
பத்து பேரைக் கொண்ட அரசியமைப்பு சபையில் 07 பாராளுமன்ற உறுப்பினர்களும் 03 சிவில் அமைப்பு உறுப்பினர்களும் உள்ளடக்கப்படுவர்.
இதன்படி அரசியலமைப்பு சபைக்கு தனது நேரடி பிரதிநிதியை ஜனாதிபதியினால் நியமிக்க முடியும். பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் 05 உறுப்பினர்களை நியமிப்பதற்கான அதிகாரத்தை கொண்டுள்ளனர். இந்த ஐவரில் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் ஏனைய மூவரும் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
எஞ்சிய உறுப்பினர்கள் பாராளுமன்றத் திலுள்ள சிறிய கட்சிகளால் நியமனம் செய்யப்படுவர். அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும் விஜயதாச ராஜபக்ஷவும் 07 வது பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு சபை உறுப்பினர்களாகவும் அங்கம் வகித்தனர்.
அத்துடன் சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் முன்னாள் அரசியலமைப்பு சபை உறுப்பினர்களென்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பின் 29 வது மறுசீரமைப் புக்கமைய சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் மற்றும் அதனை மேற்பார்வை செய்தல் என்பன அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகளாகும்.
Average Rating