சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள்!!
சர்வதேச பொறுப்பு கூறல் பொறிமுறையை வலியுறுத்தி கையொப்பமிடும் போராட்டம் இன்று ஏழாவது நாளாக சாவகச்சேரியில் இடம்பெற்றது.
´சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறைக்கான தமிழ் செயற்பாட்டுக்குழு´ முன்னெடுக்கும் இந்த கையெழுத்துப் போராட்டம் இன்று யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி நகரில் இடம்பெற்றது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை புரிந்தோருக்கு ஏதிராக சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு ஜக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தியும், இலங்கை அரசினால் ஏற்படுத்தப்படும் எந்தவொரு உள்ளக பொறிமுறை விசாரணயை நிராகரித்தும் இந்த கையெழுத்து போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுதவிர உள்ளக விசாரணை தேவையில்லை சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என கோரி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நல்லூர் நோக்கிய நடைபவனி ஆரம்பமாகியுள்ளது.
கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் நடைபயணம் ஆரம்பமானது.
இந்த நடைபயணத்தில் பாராளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரும் பங்கேற்று உள்ளனர்.
இதேவேளை போர்குற்ற விசாரணையானது சர்வதேச பொறிமுறையின் கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்துக்கள் சேகரிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை (09) மட்டக்களப்பு மணிக்கூட்டக் கோபுரத்தின் அருகில் நடைபெற்றது.
மட்டக்களப்பு அம்பாரை மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொண்னையா, சிவில் சமூகத்தவர்கள், வரியிறுப்பாளர் சங்கத்தினர், கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் யுனியன், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர் உட்பட பலர் கையெழுத்திட்டனர்.
Average Rating