ஜம்மு-காஷ்மீரில் முதல் சர்வதேச மாரத்தான்: பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட 12 பேர் கைது!!
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக இன்று சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்களிடம் மர்ம நபர்கள் சிலர் தவறாக நடந்து கொண்டதால் அங்கு வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
ஸ்ரீநகரின் ஹஷ்ரத்பால் பகுதியிலுள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தில், 21 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட முதல் சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆர்வமுடன் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். தால் ஏரியை தாண்டி அவர்கள் ஓடிக் கொண்டிருந்த போது, அவர்களைக் கடந்த சில மர்ம நபர்கள் மாரத்தானில் ஓடிய பெண்களை நோக்கி தகாத வார்த்தைகளை உபயோகித்து, அவர்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினருக்கும் மர்ம நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அதில் போலீசார் மீது கற்கள் வீசப்பட்டதால், அங்கு வன்முறை வெடித்தது. பதற்றத்தைத் தணிக்க, கலவரக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போன்று காட்சியளித்தது.
இதற்கிடையில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 12 பேரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Average Rating