வேலியே பயிரை மேய்ந்தது: கோவிலில் சிலைகளை திருடிய பூசாரி உள்பட 6 பேர் கைது!!
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தெலுங்கானா மாநிலத்தில் கோவிலில் பூஜை செய்து வந்த பூசாரியே சிலைகளைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாரங்கல் மாவட்டம் பர்லபள்ளியில் புகழ்பெற்ற சென்னகேசவ சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள சென்னகேசவ சுவாமி, பூதேவி மற்றும் ஸ்ரீதேவி சிலைகள் கடந்த ஜூலை மாதம் 15-ம் தேதி நள்ளிரவில் திருட்டுபோனது. இந்த பஞ்சலோக சிலைகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஐதராபாத்தின் கேபிஎச்பி பகுதியில் சிலைகளை இன்று விற்க முயன்றபோது கே.பிக்சாபதி (வயது 75) உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அந்த சிலைகள் வாரங்கல் சென்னகேசவ சுவாமி கோவிலில் திருடப்பட்ட சிலைகள் என்பதும், கைது செய்யப்பட்ட கே.பிக்சாபதி, சென்னகேசவ சுவாமி கோவிலில் பூசாரியாக சேவை செய்து வந்ததும், அவர் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி சிலைகள் திருடப்பட்டதும் தெரியவந்தது.
குற்றவாளிகள் அனைவரும் வாரங்கல் போலீசிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
Average Rating