திருமணமின்றி குழந்தைப் பெற்ற பெண்ணை மிரட்டி, அவளது குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் விட்ட டாக்டர் கைது!!
உத்தர பிரதேசம் மாநிலத்தில் முசாபர்நகரில் பிரசவத்துக்காக சென்றிருந்த பெண் திருமணமாகாமல் குழந்தை பெற்றெடுக்கிறார் எனத் தெரிந்துகொண்ட மருத்துவர் ஜித்தேந்திரா சவுத்ரி நம் சமூகம் உன்னையும், உன் குழந்தையையும் ஏற்காது என்று பயமுறுத்தி குழந்தையை அங்கேயே விட்டுச் செல்ல சொன்னார்.
இதனைக் கேட்டு பயந்துபோன அந்தப் பெண் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டு புறப்பட்டதாக தெரிகிறது. அந்தப் பெண் சென்றபின், குழந்தைப்பேறு இல்லாத, சில நபர்களுக்கு போன் செய்து ‘ஒரு குழந்தை இருக்கிறது, ஏலம் அதிகமாக கேட்பவருக்கு குழந்தை வழங்கப்படும்’ என தகவல் கொடுத்தார்.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக, ரூபாய் 50 ஆயிரம் ஏலம் கேட்டு குழந்தையை ஒரு தம்பதி வாங்கிக்கொண்டனர். இந்த ஏலத்தில் பங்கேற்ற கலீம் அகமது, தன்னிடம் வெறும் 20 ஆயிரம் ரூபாயை வைத்திருந்ததால், அந்தக் குழந்தையைப் பெற முடியாமல்போனது. இதனால், அந்த மருத்துவர் மீது ஆத்திரமடைந்த அவர் அருகாமையில் உள்ள போலீசாருக்கு இந்த ஏல விவகாரம் தொடர்பாக தகவல் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து, குழந்தையை கடத்தி ஏலம் விட்ட குற்றத்திற்காக மருத்துவர் ஜித்தேந்திராவைக் கைது செய்தனர். குழந்தையின் உடல் நலன் சரியில்லாததால், அதை ஏலத்துக்கு வாங்கிய தம்பதி மருத்துவமனையில் அனுமதித்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் குழந்தையை அவர்களிடமிருந்து பெற்று, அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
குழந்தையின் தாயை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கலீம் ஜித்தேந்திரா போலி மருத்துவர் எனவும் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரித்ததில், மருத்துவராக ஜித்தேந்திரா பட்டம் பெற்றதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating