உடுமலை பகுதியில் கஞ்சா கடத்திய இளம்பெண் கைது!!
உடுமலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான போலீசார் உடுமலை பஸ் நிலைய பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பழனியில் இருந்து உடுமலை வழியாக பொள்ளாச்சிக்கு செல்லும் பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர்.
பஸ்சில் இருந்த ஒரு பெண்ணின் செயல் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது உடமைகளை சோதனையிட்ட போது அவரிடம் ஒரு பார்சல் இருந்தது. அது குறித்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அவர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு வைத்து விசாரணை நடத்திய போது திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்த செந்தில் என்பவரது மனைவி ரேவதி (வயது 31) என்று தெரிய வந்தது. மேலும் நடத்திய விசாரணையில் பழனியில் இருந்து பொள்ளாச்சிக்கு கஞ்சாவை விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் கைதான ரேவதிக்கு வேறு ஏதாவது குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating