மந்திரி உத்தரவு படி மனைவியை கடித்த நாயை எப்படி கைது செய்வது?: வக்கீல் கேள்வி!!
டெல்லியில் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அமைச்சரவையில் முன்னாள் சட்ட மந்திரியாக இருந்தவர் சோம்நாத் பார்தி.
இவருக்கும் லிபிகா மித்ரா என்பவருக்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது.
2013ம் ஆண்டு சோம்நாத்துக்கும் லிபிகா மித்ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சோம்நாத்தை பிரிந்த லிபிகா டெல்லி போலீசில் சோம்நாத் மீது புகார் தெரிவித்தார்.
அதில் அவர், ‘‘சோம்நாத் என்னை 2 தடவை கொலை செய்ய முயன்றார். 2013ல் நான் கர்ப்பமாக இருந்த போது அவர், தான் வளர்க்கும் ‘டான்’ என்றழைக்கப்படும் நாயை ஏவி விட்டு என்னை கடிக்க வைத்தார்’’ என்று கூறியிருந்தார்.
டெல்லி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் போலீசார் தன்னை கைது செய்யக்கூடாது என்று மாஜிஸ்திரேட் கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு சோம்நாத் மனு செய்தார்.
அந்த மனு நேற்று தள்ளுபடியானது. இதைத் தொடர்ந்து சோம்நாத்தை ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவில் கைது செய்ய டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிபதி உத்தரவிட்டார். இதனால் சோம்நாத் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே இந்த வழக்கில் சோம்நாத்துடன் அவர் வளர்க்கும் நாய் டானும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே அந்த நாயை கைது செய்ய டெல்லி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
லேப்ராடர் வகையைச் சேர்ந்த அந்த நாய் தற்போது சோம்நாத் வீட்டில் உள்ளது. அந்த நாயை பிடித்து காவலில் வைக்கப்போவதாக டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.
இதற்கு சோம்நாத்தின் வக்கீல் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘‘நாயை பிடித்து வந்து நீங்கள் எப்படி விசாரணை நடத்துவீர்கள்?’’ என்று அவர் போலீசாரிடம் விளக்கம் கேட்டார். அதற்கு பதில் சொல்ல மறுத்த போலீசார் சட்டப்படி நாயை கைது செய்வோம் என்று கூறினார்கள்.
Average Rating