30 ஆண்டுகளாக குகைக்குள் தவம் இருந்த சித்தர் சாமி: முக்தி அடையாததால் வெளியே வந்தார்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குருப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாராச்சாரி(வயது 90). இவர் தீவிர சிவ பக்தர் ஆவார். இவருக்கு ருக்கம்மா என்ற மனைவியும், 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டன.
இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மாராச்சாரியின் கனவில் சிவபெருமான் தோன்றி குருப்பட்டி கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டின் நடுவில் அமைந்திருக்கும் குகைக்கோவிலில் தான் சுயம்பு வடிவமாக அமர்ந்துள்ளதாகவும், எனவே தனக்கு நித்ய பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் சிவபெருமான் கனவில் வந்து கூறியதால் மாராச்சாரி அந்த குகைக்கு சென்றார்.
30 ஆண்டுகளாக பூஜைகள் செய்து அந்த குகைக் கோவிலேயே தனது இருப்பிடமாக கொண்டார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் அவரது கனவில் சிவபெருமான் தோன்றி இன்று 15–ந்தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நீ முக்தி அடைவது உறுதி என்று திட்டவட்டமாக இறைவன் கூறியதாக தனது மனைவியிடம் சித்தர்சாமி கூறினார்.
இதுபற்றி தனது மகன்கள், மகள்களிடமும் இன்று முக்தி அடைவதை தெரிவித்தார். இந்த தகவல் தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதனால் கடந்த 9 நாட்களாக மாராச்சாரி சித்தர் சாமி உணவு உண்ணாமலும், மவுன விரதத்தை கடை பிடித்தும் வருகிறார். மவுன சொரூபமாக உணவு, நீரின்றி உண்ணாமல், இருக்கையில் அமர்ந்தவாறு உள்ளார்.
இவர் முக்தி பெறும் நாளான இன்று காலை என்று தெரிந்ததும் சுற்று வட்டார கிராம மக்கள் ஓசூர், தேன்கனிக்கோட்டை நகர மக்களுக்கும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குகைக்கு வந்து, மாராச்சாரி சித்தர் சாமியிடம் ஆசீர்வாதம் பெற்று செல்கிறார்கள்.
இன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் முக்தி அடைவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை 10 மணி வரை முக்தி அடையவில்லை. இதனால் தியானத்தில் இருந்த மாராச்சாரி சித்தர் சாமி முக்தி அடையாததால் காலை 10 மணிக்கு பிறகு குகையை விட்டு வெளியே வந்தார். பின்னர் குகையின் வாசல் பகுதியில் அமர்ந்து சித்தர்சாமி மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வருகிறார்.
Average Rating