ராக்கெட் பாய்ந்து பஞ்சாலை நாசம்: ரூ. 20 லட்சம் சேதம்
சென்னை ஓட்டேரியில் தீபாவளியன்று விடப்பட்ட ராக்கெட் வெடி பஞ்சாலையில் விழுந்து தீப்பிடித்ததில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாயின. ஓட்டேரியில் முகம்மது இஸ்மாயில் என்பவருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது. இங்கிருந்து பல்வேறு ஜவுளி நிறுவனங்களுக்கு பஞ்சு அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று முன்தினம் தீபாவளியன்று, சிலர் அப்பகுதியில் பட்டாசுகளை வெடித்தனர். அப்போது பஞ்சாலையில் உள்ள காற்று புகும் துளை வழியாக ஒரு ராக்கெட் வெடி உள்ளே பாய்ந்து விட்டது. ராக்கெட் உள்ளே சென்று வெடித்ததில், பஞ்சு மூட்டைகளில் தீப்பிடித்துக் கொண்டது. பஞ்சு என்பதால் மளமளவென்று தீப்பிடித்து பஞ்சாலை முழுவதும் எரிந்து சாம்பலானது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பஞ்சு மூட்டைகள் அனைத்தும் எரிந்து போய் விட்டன. இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.