பாட்டுக் கட்டும் விசாலி
நடிகையாக, டிவி தொகுப்பாளினியாக திறமை காட்டி வந்த கவியரசு கண்ணதாசனின் மகள் விசாலி மனோகரன் இப்போது பாடலாசிரியையாக அவதாரம் எடுத்து பாட்டு எழுத வந்துள்ளார். கவியரசு கண்ணதாசனின் மகள் விசாலி. கே.பாலச்சந்தரால் நடிகையாக அறிமுகமானவர். ஓரிரு படங்களில் நடித்துள்ள விசாலி பின்னர் நடிப்பை விட்டு விட்டு டிவி தொகுப்பாளினி ஆனார். பிறகு திருமணம் செய்து கொண்ட பின்னர் அதையும் விட்டு விட்டு வீட்டோடு ஐக்கியமானார். பெரிய இடைவெளிக்குப் பிறகு விசாலி மீண்டும் சினிமாவுக்குத் திரும்பியுள்ளார். இந்த முறை கவிதாயினியாக வந்துள்ளார். தந்தையைப் போலவே கவிதை எழுதும் திறமை படைத்தவரான விசாலி, முழு நேர பாடலாசிரியையாக மாறியுள்ளார். இவரது முதல் பாடல், இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் ‘தனம்’ படத்தில் இடம் பெறுகிறது. சங்கீதாதான் இப்படத்தின் நாயகி. தேவதாசிப் பெண் வேடத்தில் இதில் சங்கீதா நடிக்கிறார். இப்படத்தில் விசாலியின் வரிகளில் உருவான
”கண்ணனுக்கு என்ன விருப்பம்
தினமும் உதிக்கும் பொன்மலரோ
இதழ்கள் உதிர்க்கும் சொல் மலரோ
சொல்லு கண்ணா சொல்லு கண்ணா” என்று தொடங்கும் பாடலை சமீபத்தில் இளையராஜா பதிவு செய்துள்ளார். இப்பாடலை பவதாரணி பாடியுள்ளார்.
இதேபோல காதல் விழா என்ற படத்திலும் விசாலி பாடல் எழுதியுள்ளாராம்.
இனி தொடர்ந்து பாடல்களை எழுதப் போவதாக விசாலி கூறுகிறார். கவியரசுவின் வாரிசாயிற்றே, கவிதை சமைப்பதில் விசாலி நிச்சயம் சாதிப்பார் என்று நம்பலாம்.